"ஆ! அக்கிரமம், அநியாயம். இதை அநுமதிக்கவே கூடாது" என்பது போல் பல குரல்கள் பரபரப்புடன் எழுந்தன. பவானி மட்டும் அமைதியாக இருந்தாள்.
"திருநீர்மலையில் இரகசியமாகத் திருமணத்தை நடத்தத் திட்டம். அதுவும் நமது நாடகம் இங்கு அரங்கேறும் அதே தினத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த கிழக் கோட்டான்! ஏன் தெரியுமா? எல்லோருடைய கவனமும் நாடகத்தில் இருக்கும். கல்யாணப் பார்ட்டி கிளம்பிப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் தான்! ஆனால் நாம் ஏமாந்துபோகப் போவதில்லை. இந்த நீசத்தனமான காரியத்தைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்!"
"ஆமாம்! கிளம்பலாம்! போகலாம்! உடனே புறப்படு!" என்று குரல்கள்எழுந்தன.
"பவானி! நீங்களும் வருகிறீர்களல்லவா?" என்றான் கல்யாணம்.
"நான் வருவதும் வராததும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்திருக்கிறது!"
"இதில் கேட்க இன்னும் என்ன இருக்கிறது?"
"எவ்வளவோ இருக்கிறது. கமலாவை நீங்கள் காதலிக்கவில்லை என்று முன்பு நீங்கள் சொன்னீர்கள். இப்போது உங்கள் மனம் மாறிவிட்டதா என்று தெரிய வேண்டும். அப்படி யென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். ரங்கநாத முதலியாரை அவள் மணந்து கொள்ளக் கூடாதென்றால் நீங்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாரா யிருக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா? திருநீர்மலைக்கு எப்படி போகப் போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது? இந்தச் சந்தேகங்க ளெல்லாம் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். கடைசியாக, இந்தத் திருமணத்தை எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறீர்கள் என்பதையும் யோசிப்பது நல்லது!"
"பவானி! எளிதான ஒரு பிரச்னையை நீங்கள் சிக்கலுள்ளதாக்குகிறீர்கள். கமலாவை நான்