முன்பும் காதலிக்கவில்லை, இப்போதும் காதலிக்கவில்லை. ஆனால் அதற்காக ஒரு கிழக்கோட்டான் ஒரு பச்சைக் கிளியைக் கொத்திக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருக்க முடியாது. இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சில லட்சியங்கள் உண்டு. அந்த லட்சியங்களுக்கு மாறாகக் காரியங்கள் நடக்கும்போது கை கட்டிச் சும்மா நிற்பது கோழைத்தனம். திருநீர்மலைக்குப் போக ஒரு பஸ்ஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்தச் சங்கத்தின் வாசலுக்கு வந்துவிடும். இரவோடு இரவாகப் புறப்பட்டால் திருநீர்மலைக்கு அதிகாலையில் முகூர்த்த நேரத்துக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்து விடலாம். திருமணப் பந்தலில் நாம் அனைவரும் போய் நின்று, தேவையானால் சத்தியாக்கிரகமே செய்து கமலாவைக் காப்பாற்றலாம். எனக்கு எப்போது இந்தச் செய்தி தெரியவந்தது என்று கேட்டீர்கள். இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் தெரிந்து கொண்டேன்.
இந்தக் கல்யாணத்தை எப்படித் தடுப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர் உங்கள் எல்லோரிடமும் பேச நினைத்தேன். இடையில் பஸ்ஸுக்கும் ஏற்பாடு பண்ணினேன். ரங்கநாத முதலியாரும் மாசிலாமணி குடும்பமும் மெய்யாலுமே கிளம்பிச் செல்கின்றனரா என்று கண்காணிக்கவும் செய்தேன். இன்று பிற்பகல் அவர்கள் புறப் பட்டுச் சென்று விட்டார்கள். விசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியும் என்னை உடனே பேச விடாமல் தடுத்தது. போதுமா பவானி? திருப்திதானா? இப்போதாவது நாம் புறப்படலாமா?"
பவானி சிரித்தாள். "கல்யாணம்! அரும் பெரும் சாதனைகளைப் புரிந்த வீரனைப் போல் பேசுகிறீர்களே! உம்? உங்களைப் பற்றி நான் எவ்வளவோ உயர்வாக எண்ணி வந்தேன். இன்று எனக்குப் பெரிய ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்!"
"எந்த விதத்தில்? நான் என்ன தவறு செய்தேன்? தயவுசெய்து விளக்கினால் நல்லது" என்று சற்று விரைப்புடன் வினவினான் கல்யாணம்.
"சத்தியாக்கிரகம் என்ற சொல்லை உபயோகித்தீர்கள். ஆனால் நீங்கள் செய்ய எண்ணியுள்ள காரியம் துராக்கிரகம்தான். இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு இந்த விவரம் தெரியுமென்றால் நீங்கள் உடனே ரங்கநாத முதலியாரை அணுகி நயமாகப் பேசி அவர் மனத்தை மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. திருமண தினத்தன்று கல்யாணப் பந்தலில் கலாட்டா செய்து ஒரு பரபரப்பை ஏற்படுத்த