ஆசைப்படுகிறீர்கள். ரங்கநாத முதலியாரை அப்போதுதான் நன்றாக அவமானப்படுத்தியதாகும். வெட்கித் தலை குனிய வைத்ததாகும் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்."
"ரங்கநாத முதலியாரிடம் நான் நயமாகப் பேசியிருந்தால் அவர் உடனே என் சொற்படி கேட்டு நடந்து கொண்டிருப்பாராக்கும்? பவானி! ரங்கநாத முதலியாரை உங்களைவிட நான் நன்றாக அறிவேன். அவர் உடனே போலீஸ் பாதுகாப்பை நாடியிருப்பார். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிருக்கும்."
"அப்படி நீங்கள் கருதுவதா யிருந்தால் சத்தியத்தின் வெற்றியில், தார்மிக வற் புறுத்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்" என்றாள் பவானி. "கமலா, அவள் பெற்றோர், ரங்கநாதன், உங்கள் தகப்பனார், அவசியமானால் ஊரிலுள்ள மற்றப் பெரியவர்கள் எல்லாரிடமுமே நாம் பேசியிருக்கலாம். இப்படி ஒரு திருமணம் நடக்க அனுமதிப்பது தவறு என்று ஆரோக்கியமான ஓர் எதிர்ப்புணர்ச்சியை வளர்த்திருக்கலாம்."
"போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீர்கள். இரண்டு நாட்களில் நடக்கக் கூடிய காரியமா, வெகுஜன அபிப்பிராயத்தை வளர்ப்பது என்பது?"
"நாளைக்கு நாடகம் என்று அறிவித்திருக்கிறீர்களே; டிக்கட் விற்றிருக்கிறீர்களே; காசு கொடுத்தவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்?"
"நாடகத்தை ஒரு வாரம் ஒத்திப் போடுவதில் ஒன்றும் குடிமூழ்கிப் போய் விடாது. இப்போது வாங்கியிருக்கிற டிக்கெட்டை வைத்துக் கொண்டே எல்லோரும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரலாம் என்று அறிவித்து விடலாம். ஆனால் கல்யாணத்தை நாளைக்கு நிறுத்தாமல் போனால் போனதுதான். அந்த அநீதியை அப்புறம் நேராக்கவே முடியாது."
"அநீதி என்று எப்படித் தீர்மானித்தீர்கள்? கமலாவே இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதித்திருந்தால்?"
"ஏது, நீங்களே பக்கத்திலிருந்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தது மாதிரிப் பேசுகிறீர்களே?"