"இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் மனத்தை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் கமலாவின் மனம் எப்படிச் செயல்படும் என்பதை நான் நன்றாக உணர முடியும்."
"அப்படியே அவள் சம்மதித்திருந்தாலும் அது பெற்றோரின் வற்புறுத்தலால் அல்லது ஒரு வீம்புக்காகத்தான் இருக்கும். பின்னால் அதற்காக அவள் ரொம்ப வருத்தப் படுவாள்."
"மிஸ்டர் கல்யாணம்! முடிவாகச் சொல்கிறேன். நீங்கள் செய்யப் போகும் காரியம் அநாகரிகமானது. எனக்குச் சம்மத மில்லை. சட்ட ரீதியிலோ அல்லது தார்மீக ரீதியிலோகூட உங்களுக்கு இதைச் செய்ய அருகதை இல்லை. நான் போய் வருகிறேன். நாடக ஒத்திகையைத் தொடர்வதானால் என் வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்கள்."
பவானி விடுவிடுவென்று நடந்து சங்கக் கட்டிடத்தின் வாசலுக்கு வந்து காரில் ஏறினாள்.
அவள் சென்ற பிறகு கல்யாணம் தன் நண்பர்களைப் பார்த்து, "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அவன் குரலில் இப்போது முன்பிருந்த வேகம், உறுதி ஏதுமில்லை. பவானிக்கு இந்தக் காரியம் பிடிக்கவில்லை. கோபித்துக் கொண்டு போய் விட்டாள் என்றதும் அவனுக்கு உற்சாகம் குறைந்து விட்டது. அவள் பிரமாதமாகத் தன் ஏற்பாடுகளைப் பாராட்டுவாள் என்று எதிர்பார்த்து வந்ததற்கும் அவள் உண்மையில் நடந்து கொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! "நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். நான் யாரையும் வற் புறுத்தத் தயாராயில்லை. நாம்பாட்டுக்கு இந்தத் திருமணத்தைப் பற்றிய விவரம் ஒன்றுமே தெரியாதது போல இருந்து விடலாம். நாடகத்தைத் தொடர்ந்து நடத்தலாம்"என்றான்.
ஓரிரு விநாடிகள் மௌனம் நிலவியது. அதையடுத்து ஒரு தீவிரவாதி, கணீரென்று பேசினான். "ஏன் தயங்குகிறீர்கள்? உங்களை யெல்லாம் பார்த்துத்தான் மகாகவி பாரதி, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்று பாடினான். 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி' என்றான். கமலாவுக்கு இப்படி நீங்கள் வஞ்சனை செய்யலாமா? முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? அந்தப் பவானி, தானே கமலாவின் கழுத்தில் கல்லைக் கட்டிக்