பவானி கலவரம் அடைந்தவளாக, "நோ, நோ! எனக்கு ஒன்றுமே வேண்டாம் ஸார்!"என்றாள்.
"காப்பி வேண்டாம். மோர்? சாத்தீர்த்தம்? தண்ணீர்?"
"எதுவும் வேண்டாம். நான் இப்பத்தான் நம்முடைய சங்கத்தில் டிபன், காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன்."
"நாடக ஒத்திகை நடக்கிறதோ இல்லையோ, டிபன் காப்பியை எல்லாரும் கச்சிதமாக முடித்துக் கொள்வீர்கள் போலிருக்கு."
"நேற்று வரை ஒத்திகை சரியாகத்தான் சார் நடந்தது. இன்றுதான் தகராறாகிவிட்டது. நானும் கிளம்பி வந்துவிட்டேன்."
"ஏன் என்ன விஷயம்?"
"கல்யாண விஷயம்தான்."
"என்ன பண்ணினான் அவன்? வர வர அவன் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை. ரொம்ப அதிகப்பிரசங்கியாக இருக்கிறான். பாருங்க, 'ஏண்டா, நாடகத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தர வேண்டாமா? என்றால் சிரிக்கிறான். எனக்கு நடிக்கத் தெரியாதாம். நீங்க பார்த்திருக்கிறீங்களா? ஹாம்லெட்.... 'டு பீ ஆர் நாட் டு பீ'....ன்னு நான் ஆரம்பிச்சா....."
"அடடா! நான் உங்க மகன் கல்யாணத்தைக் குறிப்பிடவில்லை. அவர் 'அக்கிரமக் கல்யாணம்' என்று கருதுகிற ஒரு திருமணத்தைப் பற்றிப் பேச வந்தேன்."
"அதென்ன புது மாதிரி கல்யாணம்? வைதிகக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்றெல்லாம் தான் உண்டு. அக்கிரமக் கல்யாணம் என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறதா?"