'அடடா! அது ஆபத்தாயிற்றே! ஆற வைத்துவிட வேண்டியதுதான்."
"ஆறாதாம்! இவர்கள் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாம்!"
"அடேடே! அப்படியானால் மற்றவர் உடம்பில் ஓடுவது இங்கிலீஷ் ரத்தமோ?"
"இன்று மாலையே அவர்கள் பஸ்ஸில் புறப்படுகிறார்கள். விடிவதற்குமுன் திருநீர்மலை போய்ச் சேர்ந்துவிட உத்தேசம்."
"நானும் போகிறேன். பின்னோடு."
"அவர்கள் கல்யாணத்தைத் தாலி கட்டும் சமயத்தில் நிறுத்திவிடப் போவதாகச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஊரில் இரண்டாம் பேர் அறியாமல் திருமணத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்த ரங்கநாதனை வியப்பில் ஆழ்த்தவே போவதாகப் பாவனை செய்வார்கள். போய், 'அத்தனை பேருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்தால்தான் ஆச்சு' என்று பிடிவாதம் பிடிக்கப் போவதாகச் சொல்வார்கள்."
"நியாயம்தானே! அவருடைய வக்கீலான எனக்கே விஷயம் தெரிவிக்கவில்லையே அவர். நானும் இவர்களோடு போய் நிற்கத்தான் போகிறேன். தாலி கட்டி முடிந்த பிறகு இரண்டு தொன்னை பாயசமாவது உறிஞ்சிக் குடிக்காமல் ஊர் திரும்பப் போவதில்லை."
பவானி புன்னகையுடன், "பெஸ்ட் ஆஃப் லக், நான் வரட்டுமா?" என்றாள்.
"சீக்கிரம் கிளம்புங்கள். கல்யாணம் வரும் போது நீங்கள் இங்கிருப்பது நல்லதில்லை."
பவானி வாசலுக்கு வந்தபோது உள்ளேசெல்லத்தின் குரல் பெரிதாக ஒலித்தது.
"அந்த ராங்கிக்காரி மினுக்கிக் கொண்டு வந்து நம்ம குழந்தையைப் பற்றி என்னென்னமோ பழி சுமத்திட்டுப் போறா. நீங்களும் பல்லை இளிச்சுக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருக்கீங்களே!"