(Reading time: 6 - 12 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

"ஸார்! வேடிக்கைக்கு இது நேரமில்லை. ரங்கநாத முதலியார் உங்க 'கிளையண்ட்' தானே? அதனால் உங்களிடம் பேசிவிட்டுப் போவது நல்லது என்று நினைத்தேன். அவர் கமலாவை மணந்துகொள்ளப் போகிறார். நாளைக்குத் திருநீர்மலையில் யாரும் அறியாமல் தாலி கட்டிவிட ஏற்பாடு. ஆனால் இந்த விஷயம் உங்கள் பிள்ளைக்குத் தெரிந்துவிட் டது. தமது நண்பர்களோடு பெருங்கூட்டமாகப் பஸ்ஸில் புறப்பட்டுப் போய்க் கல்யாணத்தை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்."

  

"நிறுத்திவிட்டுப் போகட்டுமே, உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம்?"

  

"ரங்கநாதனுக்கு நீங்கள்தானே வக்கீல்?"

  

"ஆமாம், அதனால் அவர் செய்கிற அக்கிரமத்துக்கெல்லாம் பக்கபலமாக நிற்க வேண்டுமா?"

  

"நான் அப்படிச் சொல்லவில்லை."

  

"மிஸ் பவானி, உங்களுக்குக் கமலா மீது என்ன கோபம்? அவள் அந்தக் கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

  

"நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கமலாவின் உள்ளம் எனக்கு நன்றாகத் தெரியும். அவளிடம் எனக்குள்ள அக்கறையால்தான் நான் வாதாடுகிறேன். அவள் முழுச் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடக்கிறது என்றே நான் நம்புகிறேன். அப்படியானால் இவர்கள் போய்க் கல்யாணத்தை நிறுத்த என்ன உரிமை பெற்றிருக்கிறார்கள்? மேலும் ரங்கநாதமுதலியாரின் வக்கீல் என்ற முறையில் அவருக்கு மணப் பந்தலில் நேரக்கூடிய அவமானத்தை நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ என் நோக்கத்தையே சந்தேகிக்கிறீர்கள்."

  

"கல்யாணம் வரட்டும். விசாரிக்கிறேன்" என்றார் கோபால கிருஷ்ணன். "உங்களுக்குப் பழமொழி தெரியும் இல்லையா? 'குரைக்கும் நாய் கடிக்காது' என்று. இவர்கள் வாய்ச் சொல் வீரர்கள்."

  

"அப்படித் தோன்றவில்லை. தீவிரமாய் இருக்கிறார்கள். இவர்கள் ரத்தம் கொதிக்கிறதாம்."

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.