'கோர்ட் உத்தரவை இடியே விழுந்தாலும் மீறக் கூடாது' வக்கீலாகப் பிராக்டீஸ் செய்ய நினைக்கும் இளைஞன் சட்டப் படிப்பின் அரிச்சுவடியையே மறப்பதா?"
"எஸ் யுவர் ஆனார்!... அதாவது நோ யுவர் ஆனார்.... அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்கள் எச்சரிக்கையைக் கல்யாணத்திடம் கூறுகிறேன். 'அரிச்சுவடியை மறக்கலாகாது' என்றும் சொல்லி வைக்கிறேன்."
கோவர்த்தனன் புன்னகையை மறைத்துக்கொண்டு, பவானி பக்கம் திரும்பி, "யு மே புரொஸீட்" என்றார்.
அவரை வெறித்துப் பார்த்துக் கல்யாணம் நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டது வேறு யாருக்கும் கேட்கா விட்டாலும் அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.
வழக்கில் சாட்சியங்களின் விசாரணைகளெல்லம் முடிந்த பிறகு, 'ஸம்மிங் அப்பில்' ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் வாதித்தார்.
"இந்தக் கல்யாணத்தை நிறுத்திய இளைஞர்கள் பெரியதொரு சமூக சேவை செய்திருக்கிறார்கள். சின்னஞ் சிறு பெண்ணைத் தலை நரைத்த கிழவருக்குக் கல்யாணம் செய்து தருவது தருமமா? முறையா? அழகிய கிளியை வளர்த்துப் பூனையிடம் ஒப்படைப்பதா? அறியாப் பெண்ணைப் பலவந்தமாக ஒரு கிழவனுக்குக் கட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அவளுடைய கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளி விடலாம் அல்லவா? இப்படிப்பட்ட அக்கிரமத்தைத் தடுத்த இளைஞர்களுக்குச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும் அது குற்றமாகாது.
"என்னையும் ஒரு பிரதிவாதியாக்கி யிருந்த போதிலும் 'இளைஞர்கள் ஆற்றிய சமூகப்பணி' என்று என்னை உட்படுத்திக்கொள்ளாமலே பேசுகிறேன்.
காரணம், நான் இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதைச் சாட்சிகள் உங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நான் பஸ்ஸைத் தவற விடாமல் அவர்களுடனேயே சென்றிருந்தாலும் இளைஞர்களைத் தடுத்திருக்க மாட்டேன். திருமணத்தை நிறுத்தத்தான் நானும் முயன்றிருப்பேன். ஒருவேளை நான் அந்த இளைஞர்களைப் போல் அமர்க்களப்படுத்தி