மணந்து கொள்ளச் சம்மதித்ததாகக் கூறினாள். தன்னைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றாள்......"
"அவள் சொன்னது சரிதான்" என்று குறுக்கிட்டார் கோபால கிருஷ்ணன். "ஆனால் அதையெல்லாம் அவள் தானே சொன்னாளா அல்லது யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பயத்தில் அப்படியே ஒப்பித்தாளா என்பதுதான் கேள்வி!"
"கமலாவுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு என் மதிப்பிற்குரிய நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். வேறு விதமாக அவளைப் பேசும்படி அவர் செய்து விட்டால் நான் இந்த வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன். உண்மையில் கமலாவின் தகப்பனார், திருமணம் நின்றதால் பட்ட அவமானம் போதும், கோர்ட்டுக்கு வேறு போய் ஊர் சிரிக்க வேண்டாம் என்று யோசித்தார். ஆனால் இந்தப் பெண்தான் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லத் தான் தயார் என்று முன் வந்தாள். அதைக் கேட்ட பிறகுதான் இவள் பெற்றோருக்கும் சூடு பிடித்து என்னை அணுகினார்கள். கமலாவுக்கு அதிக வயதாகா விட்டாலும் அவள் பச்சைக் குழந்தையல்ல. உலக இயல்பை நன்கு அறிந்தவள். சமூக சேவா சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் போல் நமது நாட்டில் பிறருக்கு வாத்தியாராக இருக்க விரும்புகிறவர்கள் ஏராளமாக உண்டு. ஆனால் தங்களுக்கு என்று வரும்போது சுயநலமிகளாகி விடுகிறார்கள். இந்தத் திருமணத்தைச் சட்ட விரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து தடுத்து விட இவ்வளவு வாலிபர்கள் வேலைமெனக் கெட்டு பஸ் வைத்துக்கொண்டு போனார்களே - இவர்கள் நாடகத்துக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக் கணக்கானவர்களை மோசடி செய்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் கிளம்பிச் சென்றார்களே - கிழவனுக்கும் குமரிக்கும் திருமணமா என்று சீறுகிறார்களே இவர்களில் யாராவது ஒருவர் இந்த ஏழைப் பெண்ணை மணப்பதற்கு முன்வருவாரா? மாட்டார்! அப்போது பணம், பதவி, சொத்து, அந்தஸ்து, ஜாதி எல்லாம் குறுகிட்டு விடும்!...."
கல்யாண சுந்தரம் எழுந்து நிற்க முயன்றான். ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார்.
பவானி, "மிஸ்டர் கல்யாண சுந்தரம் ஏதோ கூற ஆசைப்படுகிறார் போலிருக்கிறதே!" என்றாள்.
----------------
தொடரும்...