யிருக்கமாட்டேன். மாசிலாமணியிடமும் ரங்கநாத முதலியாரிடமும் நல்லபடியாகப் பேசி அமைதியான முறையில் திருமணத்தை நிறுத்த முயன்றிருப்பேன்.
"நேற்றுவரையில் ஏன், இன்றுகூட - இந்த ஒரு கேஸில் தவிர - நான் ரங்கநாதனின் வக்கீல் என்பதைக் கனம் கோர்ட்டார் யோசித்துப் பார்க்க வேண்டும். அவருக்கு வக்கீல் என்பதை விட அவருக்கு ஆருயிர் நண்பன் என்பதில் அதிகமாக மகிழ்ச்சி அடைபவன் நான். நண்பன் தவறு செய்தால் சுட்டிக் காட்டுவது என் கடமை அல்லவா? எனவே ரங்கநாத முதலியார் செய்த ஒரு காரியத்துக்கு எதிராக இந்த வழக்கில் நான் பேச நேர்ந்ததற்கு அவர் வக்கீல் என்ற முறையில் வருத்தப்பட்டாலும் அவர் நண்பன், அவர் நலனை நாடுகிறவன் என்ற முறையில் மகிழ்கிறேன். மீண்டும் சொல்கிறேன், இந்த இளைஞர்கள் பெண் குலத்துக்கு அரிய பெரிய பணியாற்றியுள்ளனர். காலம் வேகமாக மாறி வருகிறது. பெண்களின் சம உரிமைகள் மதிக்கப்படுகின்றன. ஒரு கட்டாயக் கல்யாணத்தை நிறுத்திய தீரர்கள் போற்றுதலுக்கு உள்ளாகாமல் தண்டனை பெற்றால் பிற்போக்காளர்களாவோம். சட்டரீதியாக மட்டுமன்றி, சமூகப் பிரக்ஞையுடன் இந்த வழக்கை அணுகுவோம். தேசத்துக்கே வழிகாட்டும் புரட்சிகரமான தீர்ப்பு இங்கே உருவாகட்டும்!"
மாறாத புன்னகையுடன் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பவானி இப்போது பேச எழுந்தாள்.
"எனது சகோதரர் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன்.... அடேயப்பா! அபாரமாகப் பேசினார். பெண்களின் சம உரிமைகளை மதிப்பதில் நான் கோபாலகிருஷ்ணனுக்குச் சிறிதும் சளைத்தவள் அல்ல. அதனால் அவர் பேச்சை நான் ரொம்பவும் ரசித்தேன். ஆனால் அவர் பேச்சில் ஆவேசம் இருந்ததேயன்றி விஷயம் ஒன்றுமில்லை. அவர் பேச்சு காங்கிரஸ் கூட்டத்தில் கதர் சட்டையணிந்து மேடை ஏறி ஆற்ற வேண்டிய சொற்பொழிவு. கோர்ட்டில் பேசுகிற வார்த்தைகள் அல்ல.
"கல்யாணம் என்பது தனிப்பட்டவர்களைப் பொறுத்த விஷயம். மணமகனும் மணமகளும் சம்மதித்து மணம் புரிந்துகொண்டால் அதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த வழக்கில் அறியாப் பெண்ணைப் பலவந்தம் செய்தார்கள் என்று சொல்வது முழுத் தவறு. சற்று முன் கமலா சாட்சிக் கூண்டில் சாட்சியம் சொன்னதை எல்லோரும் கேட்டோம். தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்று சொன்னாள். தானே விருப்பப்பட்டு ரங்கநாத முதலியாரை