தாங்கள் பதிவு செய்யக் கூடாது. அதற்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. ஏதோ தெரியாத்தனமாக உளறுகிறான்" என்றார்.
"நான் ஒன்றும் உளறவில்லை" என்றான் கல்யாணம்.
"தெரிந்துதான் பேசினான். சரியாகத்தான் சொன்னான்" என்றார் ஒரு ஜூனியர் வக்கீல்.
"நீங்கள் சும்மா இருங்கள். ஊருக்கு இளைத்தவன் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் என்ற எண்ணம் போலிருக்கு எல்லாருக்கும்" என்று படபடத்த தன் தகப்பனார் காதில் கல்யாணம் எழுந்து நின்று ஏதோ சொன்னான்.
அவர் கோப மிகுதியில் உரத்த சத்தமாக, "என் வாயை மூடப் பார்க்கறாயேடா, வீட்டிலே உன் அம்மாவாயை யாரடா மூடறது?" என்று கேட்டது கோர்ட்டில் எல்லார் காதிலும் விழுந்து பலத்த சிரிப்பொலியை எழுப்பியது.
மாஜிஸ்திரேட் மணி அடித்து, "பவானி! மேல் உங்கள் விசாரணை நடக்கட்டும்!" என்றார்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன், "யுவர் ஆனர்! இதெல்லாம் ஏதோ சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. நான் பலமாக ஆட்சேபிக்கிறேன்" என்றார்.
பவானி மாசிலாமணி முதலியாரிடம் கலந்து பேசிவிட்டு, "யுவர் ஆனர்! வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையில் இரு கட்சியும் சமரசமாய்ப் போவதற்கு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம். மாசிலாமணி வழக்கை வாபஸ் பெறுவது கூடச் சாத்தியமாகலாம்" என்றாள்.
வழக்கை ஒத்திவைத்து அறிவித்துவிட்டு மாஜிஸ்ட்திரேட் எழுந்து தம் அறைக்குச் சென்றார்.
கோர்ட் கலைந்து நீண்ட நேரமான பிறகும் கமலா பவானியின் தோளில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். பவானி எவ்வளவு சமாதானப்படுத்தியும் ஓயவில்லை. "அசடே! எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது, பார். இன்னும் ஏன் அழுகிறாய்?" என்றாள் பவானி.