நன்றாயில்லை. உன்னால் அந்த மனுஷன் வாழ்க்கையே பாழாகிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டைவிட்டு வீட்டுக்குத் திரும்பினால் சதா உன் படத்தைப் பார்த்துக் கொண்டு பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்திருக்கிறாராம். ஏக்கத்தை மறக்கக் குடியிலும் இறங்கி விட்டாராம். அவரிடம் வேலை பார்க்கும் சமையல்காரன் மணி நேற்று வந்து ஒரு குரல் அழுதுவிட்டுப் போனான். பாவம், அவன் கோவர்த்தனன் பேரில் உயிரையே வைத்திருக்கிறான். அவரைக் காப்பாற்றிக் கரையேற்றும்படி மன்றாடினான். நீ கோவர்த்தனனை ஏற்க மறுத்துவிட்டால் அவர் எதிர்காலமே கெட்டுக் குட்டிச்சுவராகிவிடும்போலிருக்கிறது" என்றார்.
"அவருடைய எதிர்காலத்தில் அத்தனை அக்கறை காட்டுகிறீர்களே, என் எதிர்காலம் பாழானால் பாதகமில்லையாக்கும்" என்றாள் பவானி.
"அப்படி நான் எண்ணுவேனா, பவானி. கோவர்த்தனனை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன் மனத்தில் வேறு யாரையாவது வரித்திருக்கிறாயா? அதையாவது சொல். கல்கத்தாவில் இருக்கும்போது ஏதாவது நடந்ததா? உன் பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லையா? விவரமாகச் சொன்னால் உனக்காக அவர்களிடம் நான் வாதாடிப் பார்க்கிறேன்."
"என் காதலருக்கு வேறு ஒருத்தியுடன் திருமணமாகிவிட்டது, மாமா! நாட்டுப்பற்று என்னும் நங்கையை மணந்துகொண்டு நாலு வருஷங்கள் மாமியார் வீடே கதி என்று இருக்கிறார். விடுதலை பெற்று வர இன்னும் இரண்டு ஆண்டுகள் பாக்கியிருக்கின்றன" என்று கூறி குணசேகரனைத் திகைப்பு கலந்த மௌனத்தில் ஆழ்த்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள் பவானி.
----------------
தொடரும்...