"வழக்கில் பிரமாதமாக வாதாடினாய். கங்கிராஜுலேஷன்ஸ்" என்றார் கோவர்த்தனன்.
"கல்யாணத்தைப் பார்த்து 'நீயும் ஒரு பிரமச்சாரிதானே? கமலாவின் கல்யாணமாகத் தயாரா' என்று ஒரு போடு போட்டாயே! அது எனக்குக் கூடப் பொருந்தும். நானும் ஒரு பிரமச்சாரிதான்!"
"அடேடே! கமலாவுக்கு இத்தனை போட்டியா? அதுவும் இத்தனை பெரிய இடங்களிலிருந்து, 'கமலா சுயம்வரம்' என்றுகூட வைத்துவிடலாம் போலிருக்கிறதே!" என்றாள் பவானி.
"நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. கமலாவின் கல்யாணம் என்பதுதான் முடிவாகிவிட்டதே. நானும் ஒரு பிரமச்சாரிதான் என்பதைக் கமலாவின் வக்கீலுக்கு நினைவுபடுத்துகிறேன்!" என்றார் கோவர்த்தனன்.
"அம்மா, பவானி! நல்ல பதிலாகச் சொல்லம்மா. நான்தான் ஏற்கனவே உன்னிடம் கோவர்த்தனனின் விருப்பத்தைத் தெரியப்படுத்திப் பேசி யிருக்கிறேனே!" என்றார் குணசேகரன்.
"ஒருவேளை உனக்கும் கல்யாணத்துக்கும் இடையில் அன்பு வளர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தில் நான் இது நாள் வரை ரொம்ப வற்புறுத்தாமல் இருந்தேன். ஆனால் இப்போதுதான் அவன் கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது நிச்சயமாகிவிட்டதே. அதனால் இனி மேல் உன்னை நான் இலேசில் விடமாட்டேன்" என்று கூறிவிட்டுக் கோவர்த்தனன் தமது ஹாஸ்யத்தைத் தாமே ரசித்துச் சிரித்தார்.
"யுவர் ஆனர்! இந்தக் கேஸையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள்; இரண்டு வாரம் தவணை கொடுங்கள்" என்றாள் பவானி.
"ஆல்ரைட்! இரண்டு வாரம். சரியாகப் பதினைந்தாம் நாள் நான் மறுபடியும் இங்கே வருவேன். நல்ல பதிலை எதிர்பார்த்து வருவேன்" என்றார் கோவர்த்தனன்.
அவர் போன பிறகு மாமா குணசேகரன் பவானியைப் பார்த்து, "நீ இப்படி அடம் பிடிப்பது