உமாகாந்தன் வீட்டை விட்டு வெளியேறும் போது அவன் தாயார் அவனைத் தனியே சந்தித்து அழுதாள். "அப்பாதான் கோபத்தில் ஏதாவது சொல்கிறார் என்றால் நீயும் உடனே பந்த பாசங்களை அறுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவதா?" என்று புலம்பினான். உமா காந்தன் பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அவள் அவனிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவன் அப்பாவும் அண்ணாவும் தூங்கிய பிறகு அவர்களுக்குத் தெரியாமல் அவன் வீடு திரும்ப வேண்டும்; அவள் கையால் இன்னும் ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட வேண்டும்; அப்புறம் அவளிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போக வேண்டும். உமாகாந்தன் மனம் இளகி இதற்குச் சம்மதித்தான்.
தாயாருக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் வீட்டுக்குத் திரும் பியபோது தன் தகப்பனார் வீட்டை விட்டு எங்கோ தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்தான். அவரைப் பின்தொடர்ந்து அவர் அறியாமல் சென்றான். அவரும் அப்போதிருந்த பரபரப்பில் திரும்பிப் பார்க்கவே தோன்றாமல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பாங்கை நெருங்கியபோது உமாகாந்தன் சற்றுத் தயங்கி ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான்.
அவனுக்கு அவர் போக்கு விசித்திரமாகப்பட்டது. சீக்கிரமே புதிருக்கு விடையும் கிடைத்தது. பாங்கின் உள்ளே யிருந்து ஒரு பெரிய தோல் பையுடன் மதில் ஏறிக் குதித்து வெளிப்பட்ட ஒருவன் எதிர்த் திசையில் ஓட ஆரம்பிப்பதைப் பார்த்தான் உமா காந்தன். கருணாகரனோ "யாரது!" என்று அதட்டினாரே யொழிய அவனைத் தொடராமல் பாங்கின் உள்ளே சென்றார், கவலையோடு. களவு போயிருக்கிறதா என்று பார்ப்பதே முதல் காரியமாக எண்ணினார் போலும். ஆனால் உமாகாந்தன் அந்தத் திருடனை விட வில்லை. பின் துரத்தினான். ஒரு சில வினாடிகளில் திருட்டுப் போனதைப் புரிந்து கொண்டு, வெளியே வந்த கருணாகரனும் உமாகாந்தனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்.
"திருடன்! திருடன்!" என்று அவர் போட்ட கூச்சல் ஒரு பீட் கான்ஸ்டேபிள் காதில் விழுந்தது. அவன் விசிலை ஊதிக் கொண்டு கருணாகரனையும் முந்திக்கொண்டு ஓடினான்.
உமாகாந்தனுக்கு, பின்னால் தன் தகப்பனாரும் போலீஸ்காரரும் துரத்தி வருவது புரிந்தது. தன்னையே திருடன் என்று நினைத்து விடுவார்களோ என்று உள்ளூற அவனுக்குப் பயம்.