இருந்தாலும் உண்மைத் திருடனைவிடக் கூடாது என்று வேகத்தை அதிகரித்தான். கடைசியில் ஒரு தாவுத் தாவித் திருடனைப் பிடித்தே விட்டான். தெரு விளக்கின் மங்கலான ஒளி அவன் மீது விழுந்தது. கோவர்த்தனன்!
"தம்பி! என்னைக் காப்பாற்று! இது வெளியே தெரிந்தால் என் வாழ்க்கை பாழாவது மட்டுமல்ல; நம் தந்தையின் இதயம் உடைந்து விடும்" என்றான் தமையன்.
உமாகாந்தனுக்கு ஒன்றும் வழி தோன்றவில்லை. பேசாமல் பணம் அடங்கிய தோல் பையையும் பாங்குச் சாவிகளையும் தான் வாங்கிக்கொண்டான். "நீ ஓடிப்போ! நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்" என்றான். அவன் சென்று மறைந்த திசைக்கு எதிர்த் திசையில் உமாகாந்தன் ஓடத் தொடங்கினான் - அண்ணனைத் தப்புவிப்பதற்காக. ஓரிரு நிமிஷங்களுக்குள் பின் துரத்தி வந்த போலீஸ்காரரின் குண்டாந்தடி பறந்து வந்து அவன் தலையின் பின்புறத்தைத் தாக்கியது. அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் தம் மகன் உமாகாந்தன் எனக் கண்டார் கருணாகரன். அன்று மாலைதான், 'பாங்கைக் கொள்ளையடிப்பதுதானே?' என்று அவன் கேட்டது அவர் நினைவுக்கு வந்தது. "சீ! உன்னைப் பெற்ற பாபத்தைக் கழுவ ஏழு ஜன்மம் எடுத்தாலும் போதாது!" என்றார்.
தனக்கும் தகப்பனாருக்கும் இடையில் பாங்குக் கொள்ளை பற்றி வாக்குவாதம் நடந்ததும் அதைத் தொடர்ந்து தான் வீட்டை விட்டு வெளியேறியதும்தான் தன் அண்ணன் கோவர்த்தனனுக்கு பாங்கில் திருடத் தைரியம் அளித்திருக்கிறது என்பது உமாகாந்தனுக்குப் புரிந்தது. பாங்கு கொள்ளையடிக்கப் பட்டிருப்பது மறுநாள் காலை தெரிய வரும்போது உமாகாந்தன் மீதுதான் இயல்பாகத் தகப்பனாருக்குச் சந்தேகம் எழும் என்று கோவர்த்தனன் எண்ணியிருக்கிறான். ஆனால் கோவர்த்தனன் போட்ட திட்டம் திசை மாறிப் போயிற்று. உமா காந்தனை மறுநாள் காலை போலீஸார் தேடிக் கொண்டிருப்பதற்குப் பதில் அன்றிரவே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். கோவர்த்தனன் பற்றி உமாகாந்தன் வாய் திறக்கவில்லை. தன்னையே குற்றவாளியக்கிக் கொண்டான். ஆறு வருஷங்கள் தண்டனை கிடைத்தது.
----------------
தொடரும்...