எழுதித் தந்து மறுநாள் பாங்கிலிருந்து டிராஃப்ட் வாங்கி அனுப்புமாறு வெளியூர் வக்கீல் நண்பர் ஒருவரின் விலாசமும் கொடுத்தாள். உமாகாந் தனுக்காகக் குணசேகரனின் துணிமணிகள் சிலவற்றையே பெட்டிக்குள் திணித்தாள். உமாகாந்தனை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். கல்யாணம் வந்து போன பத்தாவது நிமிஷம் அவள் ஓட்டிக் கொண்டு சென்ற கார் தோட்டத்தைக் கடந்து சுற்றுச் சுவர் வாசலைத் தாண்டிச் சாலையில் ஓடத் தொடங்கிற்று.
அவளது இந்த முன்யோசனையையும் செயல் திறனையும் ஒரு பக்கம் நினைத்துப் பெருமைப் பட்டாலும் கூடவே குணசேகரனைப் பலவித அச்சங்கள் பீடித்தன. 'கோவர்த்தனன் இப்போது என்ன செய்யப் போகிறான்? பவானி போலீஸாரிடம் பிடிபட்டால் நாம் என்ன பண்ணுவது? அகப்பட்டுக் கொள்ளாமல் மலேயாவுக்குக் கப்பலேறி விட்டாளென்றாலும் அவள் பெற்றோருக்கு நாம் என்ன பதில் சொல்வது?' என்றெல்லாம் பல கேள்விகள் அவர் மனத்தைக் குடைந்தெடுத்தன.
சுமார் ஐந்தாறு மணி நேரத்துக்குப் பிறகு 'பவானி போலீஸாரிடம் அகப்பட்டுக்கொள்வாளா, மாட்டாளா?' என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. பல பலவென்று விடிந்து, சுரிய கிரணங்கள் எங்கும் பரவி இருளை விரட்டி நம்பிக்கை ஒளி பரப்பும் வேளையில், பட்சிகள் எல்லாம் மற்றொரு தினத்தை வரவேற்றுக் கீதமிசைக்கும் தருணத்தில் 'பவானியும் உமாகாந்தனும் பிடிபட்டார்கள்' என்ற செய்தி வந்து சேர்ந்தது.
ரத்தக்கறை படிந்த துணியைப் பார்த்ததும் "தப்பிவிட்டார்கள், தப்பி விட்டார்கள்" என்று கூறிக் கொண்டே கீழே ஃபோன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், தமது பதவி அளித்த செல்வாக்கைப் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பிரயோகித்ததில் அவர் விரும்பிய நல்ல பலன் கிடைத்துவிட்டது. ராமப் பட்டணத்திலிருந்து செல்லும் பிரதான சாலைகள் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கே உள்ள ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்து கார் நம்பரையும் கூறியதில், பாதைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, பவானியையும் உமாகாந்தனையும் பிடித்து விட்டார்கள். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திரும்பவும் ராமப்பட்டணத்துக்கே வந்து கொண்டிருக்கிறார்கள்!
கோவர்த்தனன் உறக்கத்தால் கனத்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் திறந்து குணசேகரனிடம் கூறினார்;