ஆலோசித்தே செய்ய வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.
அன்று மாலை ஆறு மணிக்கு வெளியே சென்ற ராதா இரவு ஒன்பது மணி வரையில் வீடு திரும்பவில்லை. வாசல் ’கேட்'டுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் சுவாமிநாதன். ஸ்ரீதரன் யாரோ நோயாளியைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார். ஜெயஸ்ரீ படுத்துத் தூங்கி விட்டாள். ’இந்த இடத்துக்குப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லி விட்டுப் போகாதோ' என்று சுவாமிநாதன் தமக்குள் பல முறைகள் சொல்லிக் கொண்டார். ’வயசு வந்த பெண். என்ன தான் பி.ஏ. படித்திருந்தாலும், இவ்வளவு துணிச் சல் ஆகாது' என்று தான் அவருக்குத் தோன்றியது.
தெருவுக்கும் உள்ளுக்குமாக அலைந்து அலைந்து கால்கள் சோர்ந்து போய் உள்ளே வந்து உட்கார்ந்தார் சுவாமிநாதன். வெளியே சென்றிருந்த ஸ்ரீதரனும் வந்து விட்டார். காரைக் கொண்டு போய் ஷெட்டில் விட்டு விட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது பெஞ்சில் கவலை யுடன் உட்கார்ந்திருந்த சுவாமி நாதனைப் பார்த்தார்.
"என்ன சுவாமி, எனக்காகவா காத்துக் கொண் டிருக்கிறீர்கள்? சாயங்காலம் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிறு நிறைந்திருக்கிறது எனக்குப் பசியே இல்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் போதும். ஜெயஸ்ரீயும், ராதாவும் தூங்கிப் போய்விட்டார்களா?" என்று கேட்டார்.
”ராதாவா? அவள் சாயங்காலம் வெளியே போனவள்தான். இன்னும் வரவே இல்லையே? எங்கே போனாள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கவலையுடன் விசாரித்தார் சுவாமிநாதன்.
"எனக்குத் தெரியாதே!" என்றார் ஸ்ரீதரன். "எங்கே போயிருப்பாள்? யாராவது சினேகிதியின் வீட்டுக்குப் போயிருக்கலாம். வந்து விடுவாள்" என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றார் ஸ்ரீதரன்.
சுமார் பத்து மணிக்கு ராதா வீடு வந்து சேர்ந்தாள். சோர்ந்த முகத்துடனும் கவலையுடனும் தனக்காக வழி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சுவாமி நாதன் எதிரில் வந்து நின்றாள். ஏதோ டிராமாவிற்கோ நடனத்துக்கோ அவள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்த மாதிரி இருந்தது அவள் அலங்காரம். நெற்றியில் வகிட்டுக்கருகில் கட்டியிருந்த பதக்கமும், காதுகளில்