ஆடும் ஜிமிக்கியும், காதளவு மை தீட்டிய கண்களும் அவளை ஒரு கோபிகையாகத் தோன்றச் செய்தன.
"என்னம்மா குழந்தை! என்ன வேஷம் இது?" என்றார் சுவாமி நாதன்.
”வேஷம் தான்! நாங்கள் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதற்காக நானும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று தான் வேஷத்தைக் கலைக்காமல் என் சினேகிதியின் காரில் வந்தேன். இன்றைக்கு 'ரிகர்ஸல்' ஆயிற்று. இன்னும் நாலு நாளில் டிராமா இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?" என்று கேட்டாள் ராதா.
சுவாமி நாதனுக்கு அவளை என்ன சொல்வது என்றே புரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு நிதானமா "அதெல்லாம் சரிதான். இப்படி நீ இரவு பத்து மணி வரைக்கும் வெளியே சுற்றி விட்டு வரலாமா? சாப்பிட வேண்டாமா? வேளையில் சாப்பிட வில்லை யென்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று தம் கருத்தை நாசூக்காக அறிவித்தார் சுவாமிநாதன்.
கீழே பேச்சுக்குரல் கேட்கவே மாடியிலிருந்து ஸ்ரீதரன் கீழே இறங்கிவந்தார். கூடத்தில் ஒளிரும் மெர்க் குரி விளக்கின் ஒளியில் அழகுப்பிம்பமாக நிற்கும் ராதையைப் பார்த்தார் ஸ்ரீதரன். தன் சகோதரி இப்படி ஒப் பற்ற எழிலுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.
"என்ன சொல்கிறார் சுவாமி? நேரம் கழித்து வீடு திரும்பலாமா என்று கேட்கிறா-ராக்கும்?" என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு ஸ்ரீதரன் தங்கையின் அருகில் வந்து நின்றார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேளையில் சாப்பிடா விட்டால் உடம்புக்கு ஆகாதாம். அதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார் அண்ணா" என்றாள் ராதா சிரித்துக் கொண்டே.
சுவாமி நாதன் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டு எலுமிச்சை ஊறுகாயும் கொண்டு வந்தார். ராதையை அங்கிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி, ஒவ்வொரு பிடியாகச் சாதத்தை எடுத்து அவள் கையில் வைத்தார்.