நாடகம் ஆரம்பித்து, நடித்து முடித்து வெளியேறிய நடிகையாகி விட்டோமே நாம்! நம்மைக் கூப்பிட்டார்களே! ஒன்றும் தெரியாத சிறு பையன். அவளை மன்னித்து அழைத்துப் போக அவர்களுக்கு மனமில்லையே' என்று வருந்தினாள் அவள்.
”பாலு! நீ சமர்த்தாகப் படித்துப் பெரியவனாகி சுதந்திரமாக இருக்கும் போது இதைப்போல எவ்வளவோ நாடகங்கள் பார்க்கலாம் அப்பா. வா, கை கால்களை அலம்பிக்கொண்டு கீதை சுலோகங்களைச் சொல், கேட்கிறேன்" என்று மகனைக் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் பவானி.
அங்கே மியூஸியம் தியேட்டரில் நாகராஜனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோமதியைத் தனியாக விட்டு விட்டு நான் போய் அவரைப் பார்த்துவிட்டு நேராக வீட்டுக்குப் போய் விடுவேன். காரை அனுப்புகிறேன், நீ சுமதியை அழைத்துக் கொண்டு வந்து விடு" என்று கூறிவிட்டு, திரை தூக்கிச் சில காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே எழுந்துபோய் விட்டான்.
மஞ்சத்திலே சாய்ந்து படுத்திருக்கிறாள் பக்த மீரா. மேவாரின் மகாராணி அவள். இட்டதைச் செய்ய ஆயிரம் பேர் காத்துக் கிடந்தார்கள். பெட்டி பெட்டியாக அணிகளும் ஆடைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. அவள் எண்ணும் எண்ணமெல்லாம் அந்தக் கண்ணனைப் பற்றித்தான். அவள் பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் தெரிந்தான். மகாராஜா தம் மனைவியைக் காண அந்தப்புரம் வருகிறார். அழகே உருவான மீரா பதறி எழுந்து பதிக்கு மரியாதை செய்கிறாள் . அவர் மனைவியிடம் இன்பமாகப் பேசுகிறார். ஆனால் அவள் செவிகளிலே கண்ணனின் வேய்ங்குழல் இசை கேட்கிறது. மஞ்சத்திலிருந்து எழுந்து அரண்மனைப் பூங்காவினுள் பாய்ந்து ஓடுகிறாள். அங்கே நீலவானில் மிதந்து செல்லும் வெண்ணிலவில் கண்ணன் தெரிகிறான். மலர் செறிந்த மரங்களின் ரகத வண்ணத்தில் தோன்று கிறான் கண்ணன். தடாகத்திலே கண்ணன். மீராவின் இதயம் முழுவதும் அவன் உருவமே வியாபித்து திருக் கிறது. மீரா மயங்கிக் கீழே விழுகிறாள்.
பக்த மீராவாக வந்த ராதையின் எழிலும் நடிப்பும் சபையோரைப் பரவசப்படுத்தி விட்டன. பலமான கர கோஷம் எழுந்தது சபையில்.
நாடகம் முடிந்தது. அநேகமாக எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். நாடகத்தில் நடித்த