பெண்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மட்டும் இருந்தார்கள்.
வேஷத்தைக் கலைத்துவிட்டு ராதா வெளியே வந்தாள். சுவாமிநாதன் நின்று கொண்டிருந்தார். ”போகலாமா அம்மா?" என்று கேட்டார். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் ராதா. அங்கே ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. ஐந்தாறு வாலிபர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள்.
'வொண்டர் புல் ஆச்ஷன்!" என்றான் ஒருவன் .
"மார்வெலஸ்!" என்றான் இன்னொருவன்.
"ரொம்பவும் பிரமாதமாக இருந்தது உங்கள் நடிப்பு" என்று, தான் தமிழன் என்பதை மறந்து விடாமல் தமிழிலேயே பேசித் தன் உற்சாகத்தைத் தெரிவித்தான் மற்றொருவன்.
கடைசியில் இருந்த வாலிபன் முன்னே வந்தான். “என்னைத் தெரிகிறதா? நேற்று கோடம்பாக்கம் ஹாஸ்டலில் டிக்கட் விற்க வந்தீர்களே. உங்கள் நடிப்பைப் பார்த்த மூன்று மணி நேரமும் நான் மீராவின் காலத்தில் வசித்தவன் மாதிரி இருந்தேன். கங்க்ராஜு லேஷன்ஸ்" என்றான் அவன். அவன் வேறுயாருமில்லை மூர்த்தி தான்!
சுவாமிநாதனுக்கு இவர்கள் உற்சாகம் ஒன்றும் வேண்டிருக்கவில்லை. வா அம்மா. மணி பதினொன்று ஆகப்போகிறது" என்று சொல்லிக்கொண்டே அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார் அவர்.
--------------
தொடரும்...