நானாகவே வரவு செலவை அவரிடம் ஒப்பித்தால் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ன அவசரம் இப்போது என்கிறார்."
வேதாந்தம் யோசனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார். பிறகு. ஆமாம். வயசு தங்கை ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே இதையெல்லாம் அவளைக் கவனிக்கச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டார்.
"ராதாவா? அந்தப் பெண், தான் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் என்றோ , அதைப் பற்றிய பொறுப்பு தனக்கு உண்டு என்றோ நடந்து கொள்ளவில்லை. இஷ்டப்படி வெளியில் போகிறதும், வருகிறதும்." சுவாமிநாதன் இவ்விதம் ராதாவைப் பற்றித்தானே அன்னியரிடம் கூறியதை நினைத்து மனதுக்குள் வருந்தினார்.
"அதைத்தான் கேட்க வந்தேன் ஐயா! வயசு வந்த பெண்ணை ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடவேண்டும் - வீட்டிலே அதைப் போற்றி வளர்க்க- அதாவது நாலும் தெரியும்படி வளர்க்க- எப்பொழுது ஒரு பெண் துணை இல்லையோ நாம் ஏன் அதைக் கன்னியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" வேதாந்தம், சிறிது உணர்ச்சி வசப்பட்டே பேசினார்.
"டாக்டருக்கு அந்த எண்ணமே இன்னும் ஏற்பட வில்லை. தம் மகள் ஜெயஸ்ரீயைப் போல் ராதாவும் ஒரு குழந்தை என்கிற நினைவு அவருக்கு."
வேதாந்தம் விஷயத்தைப் பச்சையாகக் கூறவில்லை. யாரோ ஒரு பிள்ளையுடன் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மட்டும் இல்லை. பல இடங்களிலும் பார்த்தேன். என் மனசுக்கு ஒன்றும் சரி யாகத் தோன்றவில்லை.
சுவாமிநாதன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். அவர் மனத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. பேச முடியாமல் உணர்ச்சிகளை மனத்தில் புதைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பது வேதாந்தத்துக்குப் புரிந்தது.
“நான் இப்படிச் சொல்கிறேனே என்று வருத்தப் படாதீர்கள். டாக்டருடைய குடும்ப நண்பன் நான். அவரைச் சிறு பிராயத்திலிருந்து அறிந்தவன். இந்தக் குழந்தை ராதாவுக்கு காப்பிட்ட