மாடி அறையில் ராதா சோபா ஒன்றில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்தாள். தலை நிறையச் சூடி இருந்த மல்லிகை மலர்களின் மனம் 'கம்' மென்று எழுந்தது. வெள்ளையில் சரிகைக்கரை போட்டிருந்த படவை உடுத்தி, இளம் சிவப்பு வர்ணச் 'சோளி' அணிந்திருந்தாள் அவள். முதுகில் புரளும் பின்னலை எடுத்து முன்புறம் போட்டு, அதில் கட்டியிருந்த ரிப்பனை முறுக்கிய படி மெல்லிய குரலில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள் அவள்.
காதலெனும் தீவினிலே ராதே ! ராதே - அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ! ராதே!
காதலெனும் சோலையிலே ராதே ! ராதே - நின்ற
கற்பகமாம் பூந்தருவே ராதே ! ராதே!
என்னும் பாட்டு மெதுவாக இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது .
ஸ்ரீதரன் சிறிது நேரம் பாட்டில் லயித்து அங்கேயே நின்றிருந்தார். பாட்டு முடிந்ததும் அறைக்குள் சென்று, அவள் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.
திடீரென்று அண்ணா வந்ததை அறிந்ததும் ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் சற்று முன் பாடிய பாட்டை நினைத்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.
ஸ்ரீதரன் தன் சகோதரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ”என்ன அம்மா! என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார்.
”பாட்டா?... என்னவோ அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
”என்ன பாட்டு அது? 'காதலெனுந் தீவினிலே ராதே ராதே!' என்ற பாட்டல்லவா? காதலைப் பற்றிக் கூட உனக்குத் தெரிந்து விட்டது!"