”ஆபீசுக்குக் கிளம்பியாயிற்றா?" என்று சிரித்த வாறு ஸ்ரீதரன் கேட்பார். மூர்த்தி புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவான் .
இப்படியே ஒரு வருஷம் ஆயிற்று.
மூர்த்தியின் நடத்தையில் அவ்வப்போது சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி பம்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் அவன் பணம் அனுப்பி வருவது ராதாவுக்குத் தெரிந்தது. 'அங்கே உறவினர் யாருமே இல்லையே, இவர் யாருக்குப் பணம் அனுப்புகிறார்?' என்று யோசித்துப் பார்த்தாள் அவள். மூர்த்தி குளிப்பதற்குப் போயிருந்த போது அவன் சொக்காய் ஜேபியில் இருந்த சில முக்கியமான காகிதங்களை எடுத்துப் பார்த்தாள். நாலைந்து மணியார்டர் ரசீதுகள் இருந்தன. பம்பாய்க்கு இரண்டும் கல்கத்தாவுக்கு மூன்றும் அனுப்பப் பட்டிருந்தன. பம்பாயிலிருந்து வந்த ரசீதுகளில் தமயந்தி என்றும் ரோகிணி என்றும் கையெழுத்துக்கள் காணப்பட்டன. கல்கத்தாவில் ஒரு புடவைக் கடையின் பெயர் மற்றொரு ரசீதில் காணப்பட்டது. இன்னொன்றில் நகைக் கடையின் பெயர்.
ராதா பிரமை பிடித்தவள் போல் நின்றாள். தன்னுடைய படிப்பு. அழகு. சாதுர்யம் யாவும் ஒரு சூதாடியிடம் பணயம் வைக்கப்பட்டது போல இருந்தது. வெளியூர்களிலும் இவருக்குப் பெண்களிடம் சிநேகமா?
ராதா தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். அவசரப் பட்டு வெளியே சொன்னால் விஷயம் ஆபாசமாகிவிடும். அவர் போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அன்று இரவு மூர்த்தி வீடு திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. சுவாமிநாதன் ”உன் புருஷனை இன்னும் காணவில்லையே? எங்கே போயிருக்கிறான்?" என்று ராதாவை விசாரித்தார்.
"எங்கே போனாரோ, எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் தூக்கம் வந்தால் போய்த் தூங்குங்கள்."