ராதாவுக்குத் திரும்பத் திரும்ப காலையில் பார்த்த ரசீதுகளின் நினைவே வந்தது. சபலம் நிறைந்த ஓர் ஆணின் மனத்தைப் பற்றிப் பெண்ணால் என்ன புரிந்து கொள்ள முடியும்? வண்டின் குணத்தை மலர்கள் புரிந்து கொண்டிருந்தால், மறுநாள் அந்த வண்டைத் தங்களிடம் அணுக விடுமா என்ன?
கடைசியாக மூர்த்தி வீடு திரும்பினான். நேராகத் தன் அறைக்குள் சென்று சோபாவில் உட்கார்ந்தான் அவன்.
வாசற்படியில் நின்று அவனைப் பார்த்து. ”என்ன. சாப்பிட வருகிறீர்களா?" என்று மட்டுமே கேட்டாள் ராதா.
அவன் தன் இரு கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தி-ருந்தான். பதில் ஒன்றும் பேசவில்லை .
ராதா உள்ளே வந்தாள்.
“என்ன இது? இரவு பன்னிரண்டு மணி வரையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் என் அண்ணா என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? நாம் இருக்கிறது அவர் வீட்டில் ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டாள்.
"நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது. யார் வீட்டில் இருக்கிறோமென்று, ஏதேது பேச்சு ஜோராக வருகின்ற து?"
கணவனுக்குக் கோபம் வந்திருக்கிறதென்று புரிந்து கொண்டாள் ராதா. சட்டென்று தணிந்து போனாள். "ஆமாம் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டுச் கொண்டே சோபாவின் பிடியில் உட்கார்ந்து கொண்டாள் அவள்.
"எப்படி?" என்று ஒன்றும் புரியாதவனைப் போலக் கேட்டான் அவன்.
”முதலில் சாப்பிட வாருங்கள். அப்புறம் பேசலாம்.”