சாப்பிட்ட பிறகு, இருவருமே முன்பு பேசியவற்றை அடியோடு மறந்து போனார்கள். தமயந்தியும் ரோகிணியும் யார்? என்று அவனைக் கேட்டுவிடப் பல முலைகள் முயன்றாள் ராதா. கேட்டிருக்கலாம்; கேட்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலே சுவாமி நாதன் இருந்தார். மாடியின் இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதரன் படுத்திருந்தார். தோட்டத்தில் குடிசையில் ராமய்யா படுத்திருந்தான். இவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து விட்டால் என்ன செய்வது?
ஒன்றுக்குப் பத்தாகக் கற்பனை கலந்து அவை கோடம்பாக்கம் முழுவதும் பரவுமே! கௌரவமும் கண்ணியமும் வாய்ந்த டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை புருஷன் ஸ்திரீலோலன் என்று எல்லோரும் ஏசுவார்களே என்றுதான் ராதாவின் வாய் அடைத்துக் கிடந்தது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மூர்த்தி தூங்கிய பிறகு கூட அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வெகு நேரம் வரையில் விழித்திருந்து விட்டு தூங்கப் போனாள் ராதா.
அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீதரன், சுவாமி நாதனைப் பார்த்து ”இரவு மூர்த்தி எத்தனை மணிக்கு வந்தான்? விளக்கு வெகு நேரம் வரையில் எரிந்து கொண்டிருந்ததே?”, என்று விசாரித்தார்.
சுவாமிநாதன் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார். பிறகு மெதுவாக “நான் தூங்கி விட்டேன். பதினொன் றரை மணிக்குமேல் இருக்கும். நாலைந்து மாசங்களாக அந்தப்பிள்ளை இப்படித்தான் கண்ட வேளைகளில் வருகிறான்" என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் யோசித்தபடி நின்றார். ”இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொண்டால் நன்றாக இராது. பார்க்கலாம்..." என்று கூறியவாறு தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்.
--------------
தொடரும்...