விஷயத்திலும் இறங்க முடியுமா?" என்கிற சந்தேகம் தான் அது.
’ஸ்ரீதரன் மட்டும் என்ன? வயசில் சிறியவரா? நாற்பது வயசுக்கு மேல், அதுவும் மனைவி இறந்து பல வருஷங்கள் கழித்து அவருக்கு மறு மணத்தில் ஆவல் ஏற்படப் போகிறதா? அந்த ஆவல் பால்யத்திலேயே - எழுந்திருக்க வேண்டியதல்லவா?'
’சரி வந்தது வந்தாகி விட்டது. ஏதாவது பொய்யைச் சொல்லி விட்டுப் போய் விடுவோம். இதற்குத் தான் அதிகமாக வயசானவர்களை பாவம்! வயசாகி விட்டது . இனிமேல் அவர் சற்று முன்னே பின்னே தான் இருப்பார் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது' என்று பலவாறு எண்ணமிட்டுக் கொண்டே வேதாந்தம் உட்கார்ந்திருந்தார். ஆனால், ஸ்ரீதரன் விழித்துக்கொண்டு, "என்ன! எங்கே வந்தீர்கள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன் வேதாந்தம் தாம் சொல்ல வந்ததை மறைக்க முடியாமல் சிறிது நேரம் திண்டாடிப் போனார்.
எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்க மடையாதவர்கள் யாவருக்குமே இந்தத் திண்டாட்டம் ஏற்படுவதுண்டு. விஷயத்தை மறைக்கப் போய் எக்கச் சக்கமாக அகப்பட்டுக் கொள்வார்கள். வேதாந்தத்துக்கு. பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. கட்சிக்காரர்களுக்காக நீதி ஸ்தலத்தில் வாதாடும் போது கூட கூடுமான வரையில் நியாயத்தையும் உண்மையையும் பின் பற்றியே சென்றவர் - அப்படிப்பட்டவர் அற்ப சொற்பத்துக்காக எதற்குப் பொய் சொல்லப் போகிறார்? அவர் மனசிலே ஓர் எண்ணம் எழுந்து விட்டது. அது சரியா தவறா என் றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்பொழுது அதை மறைத்துப் பேசுவானேன் என்ற தீர்மானத்துடன் வேதாந்தம் தம் அச்சங்களை உதறிவிட்டு விஷயத்தைக் கூறினார் ஸ்ரீதரனிடம்.
”எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயமும் எப்படி இருக்கிறதோ? காமாட்சி என் மகள் தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனத்தை அறிவது மிகவும் கஷ்டமான விஷயம். தகப்பனாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை லேசில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை அவள் தாய்? உயிருடன் இருந்தால் அவளைப் புரிந்து கொண்டிருக்கலாம்" என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய மௌனம் வேதாந்தத்துக்கு அச்சத்தைக் கொடுத்தது. ’சொல்லத் தகாததைச் சொல்லிக் கேட்கத் தகாததைக் கேட்டு விட்டோமோ என்னவோ' என்று பயந்தார். பிறகு ஏதாவது ஒன்றைப் பேசித்தான் ஆக