எட்டாவது படித்த ஆண்டில், வீட்டுக்கு வந்தவர்கள் பலர், அவனுடைய தந்தைக்கு மேற்படிப்பைப் பற்றி வற்புறுத்தினார்கள். "இந்தப் படிப்பே போதும், நமக்கு இந்தக் கிராமத்தில் வேண்டியது என்ன? கடிதம் எழுதவும் செய்தித்தாள் படிக்கவும் வரவு செலவுக் கணக்குப் போடவும் தெரிந்தால் போதும். பையன் எட்டாவது படித்து முடித்தால் அதுவே போதும், நல்ல அறிவோடு இருந்தால், இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டே சீமானாக வாழலாம். நான் நாலாவது வரையில்தான் படித்தேன். அந்தப் படிப்பை வைத்துக் கொண்டே நான் இந்தக் கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் நல்ல மதிப்போடு வாழவில்லையா? இந்தப் படிப்புப் போதும்" என்று அவர் மறுமொழி கூறுவார். அவர்களோ, காலம் மாறிவிட்டது என்பதை வற்புறுத்தி, பக்கத்து நகரத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் அதற்குக் குறைவாகப் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்லி வற்புறுத்தினார்கள். நகரம் என்று சொல்லக் கேட்டதும், அவர்க்குத் தம் தம்பியின் சீர்கேடு நினைவுக்கு வரும். உடனே அவர்களைப் பார்த்து, "நீங்கள் சொல்கிறீர்கள், நானும் பார்த்திருக்கிறேன், பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும், சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம் இப்படிப் படிப்படியாகக் கெட்டுப்போய்க் கடைசியில் ஓட்டாண்டியாவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா" என்று மறுத்துவிடுவார்.
அந்தக் கிராமத்துக்கு ஆபீசர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; கிராமத்தார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், "அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?" என்பார்கள். "நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்" என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.
இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் மாணவர்களின்