Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 03 - மு. வரதராசனார்
எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஊர் எங்கள் ஊர். அதன் பழம் பெருமைக்கு வேறு இயற்கைச் சான்றுகள் வேண்டுமானால், இரண்டு சொல்லலாம், ஒன்று, நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் எந்தக் கிணற்றிலும் நீர் உப்பாக இருக்கும். மற்றொன்று, மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையால் தெருக்கள் எல்லாம், அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிகப் பழைய வேப்பமரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.
அந்த அழகான ஊரில் எங்கள் தெரு தெற்கு வடக்காக அமைந்திருந்தது. எங்கே இருந்து பார்த்தாலும் வேப்பமரங்கள் வரிசையாய் உயர்ந்து நிற்க, வீடுகள் ஏறக்குறைய ஒரே வகையாய் அமைந்து அழகான காட்சியாக இருந்தன. இப்போது அதே தெரு பாழடைந்த காட்சியைத் தருகிறது. அந்தக் காலத்தில் பட்டு நெசவு எங்கள் ஊரில் மிகுதி. நெய்யும் தொழிலாளர்க்கு நல்ல வருவாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்பைப் பற்றிக் கவலையே இல்லை. பட்டுநூல்காரர் பெருகிய ஊர் அது. அதன் அடிப்படையில் வியாபாரமும் நன்றாக நடந்து வந்தது. எங்கள் தெருவின் தென்கோடியில் குதிரை வண்டிகள் நாற்பது ஐம்பது நிற்கும். ஒரு பெரிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப்போது அழகாக உள்ளது. அதை அடுத்துச் சென்றால், காவேரிப்பாக்கத்திலிருந்து ஆர்க்காட்டுக்குச் செல்லும் பாதை குறுக்கிடும். அதன் மறு பக்கத்தில் தாலுகா நிலையமும் பதிவு நிலையமும் இருந்தன. அதனால் கிராம மக்களும் மணியக்காரர் கணக்கரும் மற்ற ஊழியர்களும் எந்நாளும் எங்கள் தெருப்பக்கம் போய் வருவார்கள். எங்கள் தெரு வழியாகத்தான் வாலாசா ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஒரே நேர்வழி. அம்மூர், சோழசிங்கபுரம் முதலிய ஊர்களுக்கும் எங்கள் தெரு வழியாகவே வண்டிகள் போகும். அதனால் இரவும் பகலும் ரயிலுக்கும் கிராமங்களுக்கும் செல்லும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் போனது போனபடி இருக்கும். இப்போது பஸ் போக்குவரத்து மிகுந்துவிட்டபடியால், குதிரை வண்டிகளின் தொகை குறைந்துவிட்டது. வண்டிக்காரர்க்கு இப்போது வருவாய் குறைந்துபோனதால் அவர்கள் குதிரைகளை நன்றாக