எங்கே என்று பார்த்தேன். நான் காட்டிய நான்காம் வீட்டின் எதிரே ஒரு மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது. முன் பேசிய பையன் மட்டும் வெளியே இருந்தான். மற்றொரு பையனும் அந்த அம்மையாரும் வண்டியிலிருந்து சில சாமான்களை எடுத்துச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். சரி யாரோ, போகட்டும் என்று நான் காற்றாடிக்குச் சூத்திரம் அமைக்கத் தொடங்கினேன். அளவு பார்த்துச் சூத்திரம் அமைத்த பிறகு, கிழித்து வந்த புடைவைத் துண்டை அதற்கு வாலாகக் கட்டினேன். ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்ததாகப் பெருமிதம் கொண்டேன்.
உடனே வீட்டிற்குள் சென்று என் வேலைத்திறமையை எல்லோருக்கும் காட்டினேன். என் தம்பி பொய்யாமொழி "அண்ணா ! அண்ணா ! எனக்குக் கொடு அண்ணா" என்று கெஞ்சினான். தங்கை மணிமேகலையோ என் திறமையைப் பாராட்டாமல், "ஓஓ ! அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா? தெரிந்து போச்சு! இரு, அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்" என்று என்னை மிரட்டினாள். அதற்குள் அம்மாவே வந்து பார்த்து, புடைவை கிழிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, என் முதுகில் இரண்டு வைத்தார். அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் என் பெருமிதம் சிறிதும் குன்றாமல், பெட்டியிலிருந்து நூலுருண்டையை எடுத்துக் கொண்டு காற்றாடியுடன் வெளியே வந்தேன்.
வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே, ஓரமாக ஒதுங்கினேன். ஒதுங்கியபோது காற்றாடியைப் பார்க்கவில்லை. அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் புறத்தில் உள்ளது. அங்குத்தான் புதிதாக வந்தவர்கள் இருந்தார்கள். திகைத்துக் கொண்டிருந்தபோது, முன் கண்ட அந்தப் பையன் வெளியே வந்து "காற்றாடியா? கிளையில் அகப்பட்டுக் கொண்டதா?" என்று சொல்லிக்கொண்டே சிறிதும் தயங்காமல் என்னைக் கேட்கவும் கேட்காமல், என் கையில் இருந்த நூலைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிர, காற்றாடி வரவில்லை, எனக்குக் கோபம் வந்தது. "யாரடா நீ! உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத்