(Reading time: 14 - 28 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அந்தத் தம்பியின் குரலிலிருந்து '' என்ற ஒலி வந்ததே தவிர, புன்சிரிப்போ முகமலர்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, "போன தேர்வில் எந்தப் பாடத்தில் நல்ல மார்க் வந்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதோடு பேச்சை முடித்துவிட்டார். யாருக்கு எதில் மிகுதியான மார்க் என்றும் கேட்கவில்லை.

  

"எனக்கு கணக்கில் மிகுதியான மார்க்; நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து" என்றான் சந்திரன்.

  

"அதை எடுத்துக்கொள்" என்றார் அவர்.

  

"இவனுக்கு வரலாற்றில் நாற்பத்தைந்து மார்க். மற்றப் பாடங்களில் அதைவிடக் குறைவு" என்று சந்திரனே என்னைப் பற்றியும் கூறினான்.

  

"அப்படியானால் வரலாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

  

இதைத் தெரிந்து கொள்வதற்காகவா இந்த ஊமையிடம் வந்தோம் என்று வெறுப்போடு திரும்பினோம். குறைவான என் எண்களைப் பற்றிப் பாக்கிய அம்மையார் தெரிந்து கொள்ளும்படியாகச் சந்திரன் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது.

  

நாங்கள் அது பற்றி ஒரு முடிவுக்கும் வரவில்லை. மறு நாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டபோது சந்திரன் கணக்குப் பாடம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னான். என்னைக் கேட்டபோது நானும் அதுவே சொன்னேன். உடனே ஆசிரியர் என்னை நோக்கி, "கணக்கில் உனக்கு எத்தனை எண்கள்?" என்றார்.

  

"முப்பத்தாறு" என்றேன்.

  

"அப்படியானால் உனக்கு எப்படிக் கணக்குக் கிடைக்கும்?" என்றார்.

  

எனக்குப் பெரிய மனக்குறை ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் மற்றோர் ஆசிரியர் வந்து அவ்வாறே கூறினார். சந்திரன் எடுக்கும் பாடமே நானும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு வழி என்ன என்று கலங்கினேன். சந்திரனும் எனக்காக வருந்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.