(Reading time: 14 - 28 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

"மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?" என்றார் அத்தை.

  

அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

  

அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள். என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால் உவகையோடு இருப்பேன். அவள் பார்க்க வேண்டும் என்றே சில படங்களை நானே எடுத்துக் காட்டுவேன். இது என் தங்கைக்கும் பொறாமையாக இருந்தது. "நான் எடுத்தால் அண்ணன் கோபித்துக் கொள்கிறார். கற்பகம் மட்டும் எடுக்க விடுகிறார்" என்று அம்மாவிடம் குறை சொன்னாள். "நீ எடுத்தால் எல்லாவற்றையும் கலைத்துவிடுகிறாய். கற்பகம் அப்படிக் கலைப்பதே இல்லை" என்றேன் நான்.

  

கற்பகம் வளர வளர அவளுடைய அழகும் வளர்ந்து வந்தது. முன்னே பாவாடை சட்டை மட்டும் உடுத்தி வந்தவள். இப்போது தாவணியும் உடுத்திவந்தாள். அவளுடைய காதுகளில் திருகாணி இருந்தது போய், வெள்ளைக்கல் தோடு வந்து அழகு செய்தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள். அவற்றில் இருந்த கற்கள் அவளுடைய மேனியின் அழகையும் ஒளியையும் எடுத்துக்காட்டுவன போல் இருந்தன.

  

ஒருநாள் சனிக்கிழமை பிற்பகல், அம்மாவும் தங்கையும் பாக்கியம் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பியும் எங்கோ விளையாடப் போயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது யாரோ உள்ளே வரும் காலடி கேட்டுத் திரும்பினேன். கற்பகம் ஒரு பை நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.