"எப்போது வந்தாய் கற்பகம்" என்றேன்.
"இப்போதுதான். உங்கள் அம்மா இல்லையா?"
"இல்லையே!"
"மணிமேகலை!"
"அவளும் இல்லை" என்று நான் சொன்னவுடன் அந்தப் பையைக் கீழே வைத்து விட்டு நகரத் தொடங்கினாள். "அதைக் கீழே வைத்துவிட்டுப் போகிறாயே, என் கையில் கொடுத்தால் என்ன?" என்று அவளுடைய கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக்கொண்டு ஓட முயலவே, நான் இறுகப் பற்றினேன். வளையல் இரண்டு நொறுங்கி உடைந்தன. உடனே கையை விட்டேன். "எனக்குக் கோபம் வரும், தெரியுமா?" என்று உடைந்த வளையலைப் பார்த்தாள். அவளுடைய முகம் வாடியது. அந்த வாட்டத்திற்கு இடையே புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். நான் செய்த தவறு உணர்ந்து அவள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டு, அன்றெல்லாம் சந்திரனுடைய வீட்டுக்குப் போகாமலே நின்றேன். மறுநாள் காலையிலும் போகவில்லை. பிற்பகல் அவளே வந்தாள். அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவளுடைய பார்வை என்மேல் இருந்தது. அவளுடைய ஒரு கையில் வளையலே இல்லாததைக் கண்டு மனம் வருந்தினேன். குறும்புக்காரி அவள். அதைப் பொருட்படுத்தாமல் "நீங்கள் ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை? அண்ணாவும் நீங்களும் பேசுவதில்லையா? காய் விட்டு விட்டீர்களா?" என்றாள். "இல்லை. உன்னோடுதான் காய் விட்டிருக்கிறேன்" என்றேன். "அப்படியா? நல்லதுதான்" என்று, வலிய வந்து என் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கைகுட்டையைக் கேளாமலே எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.
----------
தொடரும்...