என் நண்பனுடைய உள்ளத்தில் - நடத்தையில் - சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.
இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.
சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: "ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே" என்பார்.
"யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை" என்பேன்.
"யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்." என்பார் அத்தை.
அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், "அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்" என்றார்.