முந்தானையால் கண்களைத் துடைத்தாள். யாரோ வருவதைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் குற்றவாளி அல்ல. அவர் தவறாக எண்ணிக்கொண்டு பழகியிருக்கிறார். அவருடைய எண்ணம் இப்படி இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டதே இல்லை. தங்கையோடு பழகுவதுபோல் என்னோடு பழகினார். நான் அண்ணன் என்று கருதிப் பழகினேன். அதனால்தான் அன்போடு திருமண அழைப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்தேன். அவர் ஏமாற்றம் அடைவார் என்று தெரிந்திருந்தால், தேர்வு முடியும் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பேனா? அதை ஏன் அவர் உணரவில்லை?" அப்போது அவளுடைய மனக்கலக்கம் தீர்ந்துவிட்டது. தெளிவாகப் பேசினாள். "எல்லாவற்றிலும் வெளிப்படையாகக் குழந்தை மனத்தோடு பழகியவர் இதில் மட்டும் ஏன் இப்படி மறைத்து நடந்தார்? ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்போல் தெரிகிறது" என்றாள்.
"ஒரு பெண் திருமணம் ஆனபிறகு இப்படிப் பழகினால் இடர்ப்பாடு இல்லை" என்றேன்.
அவள் உடனே மறுத்துப் பேசினாள்: "அப்போதும் உண்டு. அந்தப் பெண்ணின் கணவன் அப்போது அவள்மேல் சந்தேகப்படுவான்" என்றாள்.
"உண்மைதான்" என்று சிரித்தேன்.
"முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். "நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள்