(Reading time: 25 - 50 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"ஆனால் ஒரு குற்றம் என்மேல் உண்டு. அவருடைய மனம் இப்படி வளர்ந்துவருகிறது என்பதை நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன். அது குற்றம்தான். அதற்குக் காரணம், அவர் என்னிடம் அப்படி அண்ணன் போல் பழகினார். சில வேளைகளில் அண்ணன் போல் அதிகாரம் செய்தும் நடத்தியிருக்கிறார். உடம்பு நன்றாக இல்லை. ஆகையால், நாளைக்குக் கல்லூரிக்குப் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறார். சில பாடங்களில் கேள்விகள் கேட்டுத் தவறு செய்தபோது கடிந்திருக்கிறார். சில பெண்களோடு பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்."

  

அப்போதுதான் நான் உரிமையோடு சில கேள்வி கேட்டேன். "நீங்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டு போனது உண்டா?" என்றேன்.

  

"உண்டு! அம்மாவுக்குச் சொல்லிவிட்டுக் கடற்கரைக்குப் போயிருக்கிறோம். சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தங்கையை அழைத்துக் கொண்டு போனதும் உண்டு. நாங்கள் இருவர் மட்டுமே போனதும் உண்டு."

  

சந்திரன் தன் அறையில் இல்லாமல் அடிக்கடி வேறு வேலை. வேறு வேலை என்று வெளியே போய்வந்த காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து சில கேட்டேன்.

  

"அவனை என்னவென்று அழைப்பீர்கள்?" என்றேன்.

  

"'சந்திர்' என்று பெயர் சொல்லி அழைப்பேன்."

  

"யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணவில்லையா?"

  

"வெளிப்படையாகப் பழகினோம்; குற்றம் செய்யவில்லை; ஆகையால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிப் பயப்பட்டதில்லை. அண்ணனும் தங்கையும் பழகுவதில்லையா!"

  

"நான் என் தங்கையோடு நெருங்கிப் பழகுவதில்லையே!"

  

"அடிக்கடி சண்டையிட்டது உண்டு அல்லவா?"

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.