"உண்மையாக, அவருக்கு என்ன துணிச்சல் தெரியுமா" என்று சொன்னதும் அவளுடைய முகம் மாறியது. கண்கள் கலங்கின. "அப்படிப்பட்ட துணிவும் தைரியமும் அவருடைய மென்மையான உடம்பில் அடங்கிக்கிடக்கின்றன. அதனால்தான், இப்படித் துணிந்து படிப்பையும் தேர்வையும் விட்டு விட்டுப் போய்விட்டார். நீங்களும் நானும் இப்படிச் செய்வோமா? துணிச்சல்தான் அவரைக் கடைசியில் கெடுத்து விட்டது."
அது உண்மைதான் என்று எனக்குப்பட்டது.
"ஆமாம், உண்மைதான்" என்றேன்.
"வீட்டுக்கு அழைத்து வந்து அதோ அந்த நாற்காலியில்தான் உட்காரவைத்தேன். உள்ளேபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து அவரைப் பாராட்டி நன்றி கூறினார். 'உன்னைப்போல் நல்ல பிள்ளைகளும் இருப்பதனால்தான் இந்த நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது' என்று அவருடைய நல்ல பண்பைப் பாராட்டினார். என்னைக் காப்பி வைத்துக் கொண்டு வரச்சொல்லி அனுப்பிவிட்டுச் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தார். ஊர், பேர், குடும்பம் முதலிய எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் காப்பிக் குவளையோடு வந்தபோது, 'உன்னைப்போல் படிக்கிற பிள்ளைதான்'மா. வேறே கல்லூரி; நீ படிக்கும் அதே வகுப்புத்தானாம். இந்தப் பிள்ளையும் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆச்சுதாம்' என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் புறப்பட்டபோது, விடுமுறையில் அடிக்கடி வந்து போகும்படியாக அம்மா கூறினார். நானும் சொன்னேன் இப்படித்தான் எங்கள் நட்புத் தொடங்கியது" என்றாள்.
நல்ல வகையில்தான் நட்புத் தொடங்கியது என்று எண்ணினேன்.
அப்போது முதலில் வந்த பெண் வந்து, "அக்கா! உன்னை அம்மா வரச் சொன்னார்கள்" என்றாள்.
"வருவேன். அவசரம் இல்லையே. அவசரமாக இருந்தால் வந்து சொல்" என்று அவளை அனுப்பிவிட்டு "இவள் தான் எனக்கு அடுத்த தங்கை. திருமகள் என்று பெயர். இன்னும்