அப்போது ஓர் அம்மையார் எங்களை நோக்கி வர இமாவதி எழுந்து, "எங்கள் அம்மா" என்றாள். அம்மாவை நோக்கி, "இவர்தான் வேலு, சந்திரன் நம்மிடத்தில் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே" என்றாள்.
அந்த அம்மா உடனே என்னை ஆர்வத்தோடு பார்த்து "ஆமாம் சந்திரனோடு ஊரில் படித்த பிள்ளையா?" என்றார்.
"ஆமாம் அம்மா" என்றேன்.
"சந்திரன் எங்கே? என்ன இது, கதையாக இருக்கிறதே! என்னால் நம்பவே முடியவில்லையே" என்று சொல்லிக் கொண்டே என் எதிரே உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம். "அந்தப் பிள்ளை கள்ளம் கரவு இல்லாமல் குழந்தைபோல் பேசும்! என்ன மனக்குறை இருந்தாலும் எங்களிடம் வந்திருக்கக் கூடாதா? நேரில் சொல்லியிருக்கக் கூடாதா? எங்கள் வீட்டு ஆண்பிள்ளைபோல் எண்ணியிருந்தோம். அப்பா பணம் அனுப்பவில்லையானால் கேள் என்று சொல்லி வைத்திருந்தோம். மகன் போல் பழகிவிட்டு, இப்படிச் சொல்லாமல் போனால், மனத்துக்கு வேதனையாக இருக்கிறது. ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா? நாங்கள் என்ன செய்வது? ஏதாவது சாமியார் பைத்தியம் உண்டா? எங்காவது மலைக்கு, குகைக்கு" - என்றார்.
"அதெல்லாம் இருந்தால் நமக்குத் தெரியாதா அம்மா? அவரைப் பற்றி நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?" என்றாள் இமாவதி.
"இந்தத் தருணத்தில், நம்மவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் உணவு முதலிய வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் சந்திரனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தோம். திருமணத்துக்குள் வந்து சேர்ந்தால், என் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கும். அவனுடைய அப்பா வந்தாராமே; நம் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா?" என்றாள் அந்த அம்மா.
இவர்களின் உறவு முதலியவற்றை எனக்கே தெரிவிக்காமல் மறைத்திருந்தான் சந்திரன். அவன் என்னைவிட்டு ஒதுங்கி நின்ற தன்மையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை