(Reading time: 25 - 50 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"திருமண வேலைக்கெல்லாம் எவ்வளவோ உதவியாக இருப்பான் என்று மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்" என்று சொல்லி, அந்தப் பக்கம் போனவர் ஒருவரைக் கூப்பிட்டு, "சரி வரட்டுமா? கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று நகர்ந்தார்.

  

"இந்தப் பிள்ளைக்குக் காப்பி சிற்றுண்டி கொடு அம்மா" என்று தம் மகளுக்குச் சொல்லிக்கொண்டே சென்றார்.

  

மறுபடியும் நானும் அவளும் உட்கார்ந்தோம்.

  

"திருமண வேலையாக இருக்கிற வீடு. நீங்கள் வந்த வேளையில் பரபரப்பாக இருக்கிறோம். மன்னிக்கவேண்டும்" என்றாள்.

  

"அதற்கு என்ன? இருக்கட்டும்."

  

"அவர் போவதற்கு முன் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கடிதம் ஏதாவது எழுதி வைத்துவிட்டுப்போகவில்லையா?"

  

"இல்லை."

  

"அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? குழந்தை போன்ற மனம் உடையவர். அழகாக இருப்பவர்கள் பலர் பொல்லாதவர்களாக, வஞ்சகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு தீமையும் அறியாதவர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பேச்சு. ஒரு கெட்ட சொல் அவருடைய வாயிலிருந்து வராது. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நானும் அவரும் ஒரே பாடம் எடுத்திருந்த காரணத்தால், அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை எல்லாம் என்னிடம் கொடுத்தார். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்தேகம். தெரியாத கணக்கை எல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக் கொடுக்கும்போது எவ்வளவு பொறுமை. எவ்வளவு எளிமை!"

  

"எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அவன்தான் கணக்குக் கற்றுக்கொடுத்தான். அவனுடைய உதவி இல்லாவிட்டால் நான் தேர்வில் வெற்றி பெற்றிருக்கமாட்டேன்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.