இரண்டு தங்கை உண்டு. உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்" என்றாள்.
"அப்புறம்? சந்திரன் உங்களோடு நெருங்கிய நட்புக் கொண்டான் அல்லவா?" என்றேன்.
"அன்று அவருடைய பெயரை நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பெயரை அவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவரைப் பற்றி அடிக்கடி நினைத்தேனே தவிர, கடிதம் எழுதும் வாய்ப்பு இல்லை. நட்பு, ரயில் நட்புப்போல் அன்றே முடிந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் உண்மையான அன்பு உடையவர். போலி அன்பு, போலி நட்பு எல்லாம் அவருக்குத் தெரியாதவை. இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் இதே இடத்தில் வந்து நின்றார். யார் வீட்டுக்கோ போவதற்காக ஒழுங்காக உடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்த நான், அவரைக் கண்டதும், பெருமகிழ்ச்சி அடைந்தேன். 'எங்கோ புறப்படுவதாகத் தெரிகிறது. போய் வாங்க' என்றார். எனக்கோ அவரை விட்டுப்போக மனம் இல்லை. உட்கார்ந்து பேசினோம். என் படிப்பு முதலியவற்றைப் பற்றிக் கேட்டார். என்ன என்ன பாடங்கள் நடந்தன என்று கேட்டார். நானும் சொன்னேன். இன்னார் இன்னாருடைய குறிப்புகள் நல்லவை என்று சொன்னார். கணக்குகள் எல்லாம் தெளிவாகத் தெரியுமா என்று அவரே கேட்டார். உண்மையில் நான் கணக்குப் பாடத்தில்தான் அரைகுறையாக இருந்தேன். தடுமாறிக் கொண்டிருந்தேன். என் நிலையைச் சொன்னதும் கணக்குப் புத்தகத்தைக் கொண்டுவருமாறு சொல்லி, சந்தேகம் என்ன என்று கேட்டார். என் அறியாமை நீங்குமாறு விளக்கமாகச் சொன்னார். அதன் பிறகுதான் அவருடைய பெயரைக் கேட்டறிந்தேன். என் பெயரைப் புத்தகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார். "போன வாரம் எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லையே" என்று உரிமையோடு கேட்டேன். கடற்கரைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்."
அவர்களின் உறவின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால் எப்படிக் கேட்பது என்று திகைத்தேன்.
அவளே பேசலானாள்: "அது போகட்டும். என் மனத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு வேதனைப்படுத்தி வருகிறது. அதை உங்களிடம் சொல்லி நான் குற்றம் அற்றவள் என்பதை விளக்கி, ஆறுதல் பெறவேண்டும் என்றே உங்களை இங்கே வரும்படியாகச் சொன்னேன்" என்றாள்.