"எங்கள் ஆசிரியர்க்கும் அவ்வளவு திறமை இல்லை என்று சொல்லலாம். நல்ல வருவாய் மட்டும் கிடைப்பதாக இருந்தால் அவரை ஆசிரிய வேலைக்கே போகச் சொல்வேன்."
"கடைசியில்....." என்று வாய் திறந்து பேசத்தொடங்கி நிறுத்தி விட்டேன்.
"கடைசியில்?"
"ஒன்றும் இல்லை, சொல்லுங்கள்."
"இதை எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறுதல் அடையும். அம்மாவிடம் சொன்னேன். கொஞ்சம்தான் சொன்னேன். முதலில் அவருடைய பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? கல்லூரியில் இண்டரில் சேர்ந்ததற்கு அடுத்த மாதம் ஒரு நாள் மாலையில் கடற்கரையில் தனியே வந்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரியில் பெண்களிடையிலும் எனக்கு நண்பர்கள் குறைவு. என் பக்கத்தில் முரடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்னே போகட்டும் என்று நான் பின் தங்கினேன். அவன் என்னை ஒரு கண்ணால் பார்த்தபடியே மெல்ல நடந்து ஓர் இடத்தில் நின்றான். நான் பரபரப்பாக நடந்து முன்னே சென்றேன். அவன் தொடர்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும் நின்றேன். அவன் முன்போலவே செய்தான். பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்தேன். அவனும் அங்கே வந்து உராய்வது போல் சென்றான். நான் ஒதுங்கியும் பயன் இல்லை. என்மேல் உராய்ந்து கொண்டு முன்சென்று நின்றான். பஸ் வந்து நின்றது. பெண்கள் முந்திக்கொள்ளட்டும் என்று ஆண்கள் ஒதுங்கினார்கள். எனக்கு முன்னே ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறினேன். அந்த முரடன் என் பின்னே வந்து நெருங்கி ஏறி, நான் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்திலேயே நின்றான். "தொலையட்டும், இனிமேல் என்ன?" என்று பேசாமல் இருந்தேன். நல்ல பட்டுச்சொக்காயும் நீலக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது இருபது இருபத்தைந்துதான் இருக்கும். சந்திரன் என்னையும் அவனையும் கடற்கரையிலிருந்தே கவனித்து வந்திருக்கிறார். எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பஸ்ஸிலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்டமுறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என்