செய்வது? இப்படி இருக்கிறது என் கதை. போகட்டும். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்."
"வருவேன்."
"வணக்கம். நன்றி"
"வணக்கம்" என்று சொல்லிப் பேசும் கருவியைக் கீழே வைத்தேன். மாலனைத் திரும்பிப் பார்த்தேன்.
"பெரிய புதிராக இருக்கிறது" என்றான் மாலன்.
"இமாவதிதான்."
"அது தெரிந்து கொண்டேன். அரைகுறையாகத் தெரிந்தது. அவள் நிறையப் பேசினாள். நீ இரண்டொரு சொல்லே சொன்னாய்."
"இப்போது சொல்லமாட்டேன். பிறகு விரிவாகச் சொல்வேன். தவறாக எண்ணவேண்டா. அவள் பேச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற்படவில்லை. காலையில் வரச் சொல்லியிருக்கிறாள். போய்ப் பேசிய பிறகுதான் விளங்கும்."
"விழிப்பாக நடந்துகொள். இந்தப் பட்டினத்தில் யார் எப்படி என்று இரண்டொரு நாளில் தெரிந்து கொள்ள முடியாது. நம் கெட்ட காலம் எப்படி இருக்குமோ? எங்கும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது" என்றான் மாலன்.
காலையில் எழுந்ததும் ராயப்பேட்டைக்குச் செல்லும் பஸ் ஏறி நடுத்தெருவுக்கு வழி கேட்டுச் சென்றேன். பத்தாம் எண்ணுள்ள வீடு சின்ன வீடுதான். மாடியில் இமாவதி வீட்டார் குடியிருந்தார்கள். நான் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் என் பெயரைத் தெரிவித்தேன். அவள் என்னை அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இமாவதி போலவே இருந்தபடியால், அவளுடைய தங்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். வீட்டில் பலர் இருந்தார்கள்; பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்காக வந்த