உறவினராக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.
இமாவதி வந்தாள். வரவேற்றாள். ஆனால் அவளுடைய முகத்தில் புன்முறுவல் இல்லை; மலர்ச்சி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்போடு வரவேற்பவள் போல் "வாங்க" என்றாள். கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்தாள். அவளே பேச்செடுப்பாள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்தேன். அவளோ தரையைப் பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நாம் ஏன் வந்தோம் என்று வருந்தும் அளவிற்கு என் உள்ளம் மாறியது. வரவேண்டும் என்று வற்புறுத்தித் தொலைபேசியில் பேசியவள் இவள்தானா, அல்லது வேறு எந்தப் பெண்ணாவது குறும்புக்கு அப்படிப் பேசி வம்பு செய்தாளா. மாலன் சொன்னது போல் இந்தச் சென்னையில் உண்மையை எளிதில் உணர முடியவில்லையே என்று தடுமாறினேன்.
இமாவதி கற்பகத்தைப் போல் அவ்வளவு அழகானவள் என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப்பின் சுமையும் தேர்வின் தொல்லையும் காரணமாக இமாவதியின் அழகு வற்றிப்போயிருக்கலாம். இருந்தாலும் முகத்தில் கவர்ச்சி இருந்தது. நல்ல சிவப்பு மேனியும் அளவான உடற்கட்டும் உடையவள்; சின்ன நெற்றியும் சுருட்டை மயிரும் அவளுடைய முகத்திற்கு அழகு செய்தன. உழைப்பவரின் உடம்பு போல், தசைப் பெருக்கம் இல்லாமல் கைகள் கடைந்தெடுத்தவை போல் இருந்தன. இருந்தாலும் அவளுடைய கவர்ச்சி, கற்பகத்தின் அழகுபோல் முற்றிலும் இயற்கையழகின் கவர்ச்சி என்று சொல்வதற்கில்லை. அன்று அவள் அணிந்திருந்த ரோசா நிறப் புடைவையும் பொன்னிறச் சோளியும் அவளுடைய அழகுக்குக் கவர்ச்சி ஊட்டின. கோடுகளும் பூக்களும் இல்லாத புடைவையும், மிகச் சிறு புள்ளிகள் அமைந்த சோளியுமாக இருந்தமையால் அவை அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில் மணப்பெண் ஆவதற்கு இருந்த அவள் சுமையான நகைகளை அணியாமல், காதில் தோடும் கழுத்தில் பொன் சங்கிலியும் கையில் இரண்டு இரண்டு வளையலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. கையில் கடிகாரமும் காணப்படவில்லை.
அந்த வழியாக யாரோ போனார்கள். "என்ன’மா! கல்யாணப் பெண் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?" என்று ஒருத்தி கேட்டுச் சென்றாள். "எனக்கு என்ன வேலை இருக்கிறது, மாமி! எல்லாவற்றிற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள்" என்று இமாவதி சொன்னபோது, ஒரு சிறு புன்முறுவல் மின்னல்போல் தோன்றி மறைந்தது. அதன் பிறகு என்னைப் பார்த்து, "நீங்கள் எப்போது ஊருக்குப் புறப்படுவீர்கள்?" என்றாள்.