"நாளைக்கு"
"அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?"
"இல்லை."
"நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை."
"இப்படிச் செய்யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில்லை."
"ஏன் இப்படிச் செய்தார் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வந்து போனதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில்லை. தேர்வு வரையில் எப்படியோ மூச்சுப் பிடித்தேன். தேர்வு நாட்களில் விடுதியிலேயே இருந்து படித்தேன். அங்கே வகுப்புப் பெண்கள் பலருடைய சூழலில் இருந்த காரணத்தால் மனம் எப்படியோ ஒரு வகையாகத் தேறியிருந்தது. இங்கே வந்த பிறகுதான் பைத்தியக்காரி போல் ஆகிவிட்டேன். உனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா, மாப்பிள்ளை விருப்பம் இல்லையா, அதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நான் என்ன செய்வது? சொன்னால், உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களும் அல்ல. அம்மாவுக்கு மட்டும் சொன்னேன். அம்மாவுக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் சொன்னதும் விளங்கிக்கொண்டார்கள்."
இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, நாற்பத்தைந்து ஐம்பது வயது உள்ள ஒருவர், சிறிது வழுக்கையாய் மாநிறமாய் வெள்ளாடை உடுத்தியவராய் அந்தப்பக்கம் வந்தார். அவரைக் கண்டதும், இமாவதி எழுந்து "எங்கள் அப்பா" என்றாள். "இவர் சந்திரனுடைய நண்பர்; அவருடைய ஊரார்; பக்கத்து அறையில் உள்ளவர்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.
அவர் உடனே என்னைப் பார்த்து, "சந்திரன் இன்னும் வரவில்லையா?" என்றார்.
"இல்லை" என்றேன்.