"அதைக் கேட்பதற்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ஒன்றும் தெரியவில்லையா? இன்னும் அவர் வரவில்லையா?"
"இல்லையே!"
"நீங்கள் வந்து சொன்ன அன்று முதல் எனக்கு மனமே நன்றாக இல்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. சந்திரன் நல்லவர்; மிகவும் நல்லவர்; குழந்தை மனம் உடையவர். மிக நல்ல குணம். அவர் மனம் ஏன் இப்படி மாறியதோ, தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவீர்களா? நேரில் சொல்வேன். உங்களோடு பேசினால்தான் என் மனம் ஆறுதல் அடையும்."
"வருவேன்."
"வீட்டு முகவரி தெரியுமா?"
"10, நடுத்தெரு, இராயப்பேட்டை."
"அதுதான். தேர்வு முடிந்துவிட்டது அல்லவா? ஓய்வுதானே?
"ஆமாம், வருவேன்."
"அம்மாவும் தங்கைகளும் இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்லிவைப்பேன்.
"சரி."
"என்னவோ, போங்க. எனக்கு இந்த மூன்று நாளாக மனமே கலங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்குத் திருமணம். வீடெல்லாம் ஒரே அமர்க்களமாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்திதான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா என்று கேட்கிறார்கள். நான் என்ன