இயற்கையாக நடந்து கொண்டான். நீங்கள்தான், இந்தப் பழக்கம் அதுவரையில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாட்டோடு பழகினீர்கள். அந்தக் கட்டுப்பாட்டையாவது சொன்னீர்களா?"
மறுபடியும் சிறிது நேரம் திகைத்து நின்றாள். "ஆம்! சொல்லவில்லை. என்னுடைய குற்றம்தான். எவ்வளவோ முன்னேறினாலும், இந்த நாட்டில் வழிவழியாக வந்த பழக்கம் - வெளிப்படையாகச் சொல்லாமல், பழகும் பழக்கம் - இது. என் தவறுதான்" என்று வருந்தினாள்.
மறுபடியும் தங்கை வந்து, "அம்மா கூப்பிடுகிறார்கள்" என்றாள்.
"கடைசியில் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டேனா?" என்று நான் எழுந்தேன்.
"அவருடைய வாழ்க்கையே கெட்டுவிட்டது! நான் சிறிது நேரம் வருந்தினால் என்ன?" என்றாள். "சிறிது உட்காருங்கள்; சிற்றுண்டியும் காப்பியும் உண்டு செல்ல வேண்டும்" என்று உள்ளே சென்றாள். தங்கையிடம் அவற்றைக் கொடுத்தனுப்பினாள். விரைவில் திரும்பி வந்து "திருமணத்திற்கு நீங்களாவது வரவேண்டும்" என்றாள்.
"சந்திரனே அதற்குள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்றேன்.
"அப்படி அவர் வந்தால், அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. எங்கள் இல்லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறினால் நன்றாக இருக்குமே" என்று கண் கலங்கினாள்.
அங்கு உள்ள குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறாக நிற்கக்கூடாது என்று விரைவில் விடை பெற்றுத் திரும்பினேன்.
----------
தொடரும்...