எப்படிச் சொல்வது?
"சரி, சரி, தம்பி! எனக்கு வேலை ஏராளமாக இருக்கிறது. யாரோ இமாவதியோடு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். சரி, வரட்டுமா? இமாவதி! தம்பி இருக்கட்டும். அங்கே உறவினர்கள், வந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடும். அப்படி வந்து அவர்களோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கலாமே" என்று சொல்லிச் சென்றார்.
"கொஞ்சம் பேசிவிட்டு வருவேன்’மா" என்று சொல்லி விட்டு, இமாவதி என்னை நோக்கினாள்.
"என்னவோ சொல்லவேண்டும் என்கிறீர்கள்?"
"ஆமாம் என்று சிறிது நேரம் அமைதியானாள். பிறகு அவருடைய மனக்கவலைக்கு என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணம் ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள்" என்றாள்.
உண்மையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். தலை குனிந்தேன்.
"தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். என் திருமண அழைப்பிதழ் வந்தபிறகுதான் கவலைப்பட்டாரா?"
"ஆமாம்" என்று சொல்லித் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவள் தன் முந்தானையின் ஒரு முனையை வாயில் வைத்தபடியே தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உங்களிடம் ஏதாவது சொன்னாரா?" என்றாள். அவளுடைய உள்ளத்தின் கலக்கம் குரலில் புறப்பட்டது.
"சொன்னார்."
"ஏமாற்றம் அடைந்ததாகச் சொன்னாரா?"
"ஆமாம்."