வயிற்றுக்காகத் தனியே சமைக்க வேண்டா என்று தடுத்து நம் வீட்டிலேயே சாப்பிடுமாறு சொன்னேன். சும்மா அல்ல, சாப்பாட்டுக்கு இரண்டு பங்காக வேலை செய்கிறாள். ஒரு நொடி சும்மா இருப்பதில்லை. குடும்ப வேலையில் முக்கால் பங்கு அவளே செய்கிறாள். எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறாள். மற்ற நேரத்தில் மாலையில் இப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். பகல் எல்லாம் படிக்கிறாள். இலை தைக்கிறாள். கிடைக்கிற காசைப் புத்தகம் வாங்குவதற்கும் பத்திரிகை வாங்குவதற்கும் செலவழிக்கிறாள்" என்றார்.
"இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நூல் நிலையமே ஏற்பட்டு விடும்போல் இருக்கிறதே" என்றேன்.
"வீண் வேலை, வீண் பேச்சு ஒன்றும் இல்லை. அவளுடைய காலம் நல்ல வழியில் கழிகிறது" என்றார் அம்மா.
என் உள்ளம் மகிழ்ந்தது.
மறுபடியும் அம்மா, "இந்த புத்தகங்கள் எல்லாம் மணிமேகலையும் பொய்யாமொழியும் விடுமுறையில் படிப்பதற்காக இங்கே அலமாரியில் இருக்கட்டும் என்கிறாள் புத்தகம் எல்லாம் அவர்களுடைய சொத்தாம்."
உழைக்கும் பழக்கமும் தொண்டு மனமும் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பதை அந்த அம்மையாரின் வாழ்க்கை தெளிவாக்கியது.
திருமணத்துக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். இசைந்தார். மறுநாள் மாலை பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டோம். வீட்டுக்குள் நுழைந்ததும் கற்பகத்தைக் கண்டு அம்மா சிறிது வருந்தினார். "உன் திருமணத்தைப் பார்க்க அம்மாவும் இல்லையே, அத்தையும் இல்லையே" என்று கற்பகத்திடம் கூறினார். மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு வந்தபோது, துயரத்தை ஏன் நினைவூட்ட வேண்டும் என்று எண்ணி அம்மாவின் பேச்சை மாற்றினேன். கற்பகம் என்னைத் தலைநிமிர்ந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தேன். அவள் என் பக்கமே திரும்பவில்லை. தன் கண் கலக்கத்தை மறைப்பதற்காக அவ்வாறு இருந்தாள் என்று எண்ணி அப்பால் வந்தேன்.
சாமண்ணாவும் சந்திரனும் அன்போடு வரவேற்றார்கள். சாமண்ணாவின் குரலிலும்