மறந்துவிட்டீர்களா?" என்றான். "நீந்தக் கற்றுக் கொண்டீர்களே, நன்றாக நீந்துகிறீர்களா?" என்று கேட்டான்.
அவனுடைய வயது, கண் பார்வை, பசி முதலியவை பற்றி நானும் கேட்டேன். "ஒன்றும் குறைவு இல்லை" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, "ஆனால்" என்று நீட்டி அமைதியானான்.
"பிறகு என்ன குறை?" என்று கேட்டேன்.
"பெரிய பண்ணைக்காரருக்கு பிறகு பண்ணை எப்படியோ என்றுதான் கவலையாக இருக்குது" என்றான்.
"சின்னவர் சந்திரன் இருக்கிறாரே" என்றேன்.
வாயைச் சப்பி ஒலித்து, "ஒன்றும் பயன் இல்லைங்க. படித்தும் பயன் இல்லாதவராய்ப் போய்விட்டார். குழந்தை போல் ஒரு பெண்டாட்டி வந்திருக்குது. அதையும் கவனிக்காமல் ஊர் மேய்கிறார். கண்டபடி எல்லாம் திரிகிறார். சொல்ல நாக்குக் கூசுது. நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பொலி எருது போல் திரிந்தவர்கள் பலபேரைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு வாழ்வா? சே!" என்றான்.
"அப்படியா?" என்றேன்.
"இன்றைக்குக் காசு இருக்குது. உடம்பில் வலு இருக்குது என்று ஆடலாம். நாளைக்குக் காலணாவுக்கு மதிக்க மாட்டார்கள்" என்றான்.
அவனுடைய பேச்சில் சந்திரனுக்காக வருந்துவது இல்லாமல், ஆத்திரம் கலந்து பேசுவதை உணர்ந்தேன். பிறகு மாசனிடம் பேசிய போது தான் காரணம் தெரிந்தது. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவுகொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் கெடுத்துவிட்டான் என்பதை அவன் சொன்னான். அதைக் கேட்டபோது என் உள்ளமும் கொதித்தது.
"பெரியவர்க்காகப் பார்க்கிறேன். இல்லையானால் ஒரு நாளும் இந்த வீட்டில் வேலை செய்யமாட்டேன். சின்னவர் அவ்வளவு கெட்டுவிட்டார்" என்றான் மாசன்.