வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். "மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போதாவது அவன் அறிமுகப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். அவன் அதைப் பற்றியே சிந்தித்தவனாகத் தெரியவில்லை.
ஒரு முறை வீட்டினுள் எட்டிப் பார்த்தபோது அம்மாவும் சந்திரனுடைய மனைவியும் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கற்பகம் தன் அண்ணியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.
பிள்ளை வீட்டுக்காரர் வருதல், நலுங்கு வைத்தல் முதலியவை முறைப்படி நடந்தன. சந்திரன் மனைவி எல்லா வேலைகளிலும் முன்நின்று பொறுப்புடன் செய்ததும் உணவு பரிமாறியபோது அக்கறையோடு கவனித்ததும் போற்றத்தக்கவாறு இருந்தன. குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் என்று ஆசிரியர் சொன்னது பொருத்தமாக இருந்தது.
மாசன் என்ற பழைய வேலைக்காரன் எங்கோ வெளியே போயிருந்து வந்தான். என்னைக் கண்டதும் பரிவுடன் பேசினான். அம்மாவும் வந்திருப்பதாகச் சொன்னவுடன் உள்ளே தேடிச் சென்று பேசிவிட்டு வந்தான். பழைய ஆட்களில் தோட்டக்காரன் சொக்கான் ஒருவன்தான் வரவில்லை.
மணமகன் மாலன் நலுங்கு முடிந்ததும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் என்னைத் தன் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
மறுநாள் காலையில் எழுந்து தென்னந்தோப்பின் பக்கமாகச் சென்றபோது சொக்கானைக் கண்டேன். "என்ன சொக்கான்! எப்படி இருக்கிறாய்" என்று கேட்டேன்.
"நல்லபடி இருக்கிறேன் அய்யா! நீங்கள் எங்கள் ஊர்க்கு வருவதே இல்லையே?