தம்மால் ஆனவரையில் முயன்றார் என்று நம்புகிறேன். என் மனமும் மரத்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் கவலையைப் பார்க்கும் போதுதான், என்னால் அவர் துன்பப்படுகிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அப்பா மட்டும் சிறிது மனத் துணிவோடு இருப்பாரானால், நான் இனி அவரோடு வாழும் வாழ்வையே மறந்துவிடுவேன். கொஞ்ச காலம் வாழ்ந்தேன் அல்லவா? அது போதும். எத்தனையோ பெண்கள் அவ்வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவர்கள் இல்லையா? அவர்களை விட என் நிலைமை மேலானது என்று எண்ணிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் நான் புண்ணியம் உடையவள். திருவாய்மொழியும் திருப்பாவையும் எனக்கு இருக்கும்போது என்ன குறை? எப்படியோ அந்த இரண்டு மக்களையும் பார்த்துப் பாராட்டிக்கொண்டு காலம் கழிப்பேன்" என்று கற்பகத்தின் கடிதத்தைப் படித்தாள்.
அப்போது நான் நிறுத்தி, "திருவாய்மொழி பையன், நினைவு இருக்கிறது. திருப்பாவை" என்றேன்.
"மகள். குழந்தை, மறந்துவிட்டீர்களா?" என்றாள்.
"பெயர் தெரியாது அல்லவா? நல்லது. படி" என்றேன் தொடர்ந்து படித்தாள்.
"இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது, அப்பா திண்ணை மேல் உட்கார்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பையன் (அதாவது என் அண்ணன்) போன இடம் தெரியவில்லை, அவன் எங்கே வரப்போகிறான், எத்தனை குறை இருந்தாலும் மானம் உடையவன், எங்கேயாவது உயிரை விட்டு விட்டிருப்பான். இந்தச் சொத்தை எல்லாம் நான் யாருக்கு வைத்து விட்டுப் போகப்போறேன், மருமகன் வந்து எல்லா நிலத்தையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடாதா. இருக்கும் கடனைத் தீர்த்து விட்டுச் சுகமாக வாழலாமே எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லும்போது அவருடைய மனத்தில் மகனைப் பற்றிய வேதனையும் இருக்கிறது. என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அவருடைய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதுதான் இப்போது என் கவலை, - இப்படிக்கு அன்புள்ள கற்பகம்."
இவ்வாறு மனைவி படித்து முடித்த போது, சாமண்ணாவின் வேதனை என் மனத்திலும் பற்றிக்கொண்டது. சந்திரன் உண்மையாகவே மானம் உடையவன். அதனால்தான் இமாவதியால் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்ததும் கல்லூரி விடுதியை விட்டே ஓடிப்போய்